நாட்டில் 54 சதவிகிதத்தினர் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர் - மத்திய அரசு

நாட்டில் கொரோனா இரண்டாம் அலை இன்னும் முடியவில்லை.

Update: 2021-09-02 12:05 GMT
புதுடெல்லி,

டெல்லியில் மத்திய சுகாதாரத் துறைச் செயலாலர் ராஜேஷ் பூஷண் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

ஜூன் மாதத்தில் 279 மாவட்டங்களில் தினசரி பாதிப்பு 100-க்கு மேல் பதிவாகி வந்தது. ஆகஸ்ட் 30-ம் தேதி அடிப்படையில் தினசரி பாதிப்புகள் 100-க்கு மேல் பதிவாகி வரும் மாவட்டங்களின் எண்ணிக்கை 42 ஆக குறைந்துள்ளது.

கேரளாவில் மட்டும் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்துக்கும் மேல் உள்ளது. 

நாட்டில் கொரோனா இரண்டாம் அலை இன்னும் முடியவில்லை.  கடந்த வாரம் நாட்டின் மொத்த கொரோனா பாதிப்பில் 69% கேரளாவில் பதிவாகி உள்ளது.  கொரோனா சிகிச்சை பெறுவோரில் அதிகம் பேர் கேரளா, மராட்டியம், கர்நாடகா, தமிழகம் ஆந்திராவில் உள்ளனர். 

சிக்கிம், இமாச்சல பிரதேச மாநிலங்களில்  18 க்கும் மேற்பட்டவர்களில் 100% பேருக்கு  கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் போடப்பட்டுள்ளது. சிக்கிம்,  இமாச்சல பிரதேசத்தில்  32% மக்களுக்கு இரண்டாவது டோஸ் வழங்கப்பட்டுள்ளது. 

நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 16 சதவிகிதத்தினர் இரண்டு தவணை தடுப்பூசியும் செலுத்திக்கொண்டுள்ளனர். 54 சதவிகிதத்தினர் குறைந்தபட்சம் முதல் தவணை தடுப்பூசியையாவது செலுத்திக்கொண்டுள்ளனர்.

ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 18.38 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. ஒருநாளைக்குப் போடப்படும் தடுப்பூசிகளின் சராசரி எண்ணிக்கை 59.29 லட்சம். கடந்த மாதத்தின் கடைசி வாரத்தில் மட்டும் நாள்தோறும் சராசரியாக 80 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

மேலும் செய்திகள்