சிறுமி பாலியல் வன்கொடுமை: 9 நாட்களில் தீர்ப்பு - குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை

9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிக்கு 9 நாட்களில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-10-06 03:50 GMT
ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் மாவட்டம் கோட்ஹாவடா பகுதியை சேர்ந்த கமலேஷ் மீனா என்ற 25 வயது நிரம்பிய நபர் அதேபகுதியை சேர்ந்த 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். சிறுமியை கடந்த மாதம் 26-ம் தேதி கமலேஷ் மீனா பாலியல் வன்கொடுமை செய்துள்ளான்.

இந்த சம்பவம் தொடர்பாக கோட்ஹாவடா பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் 26-ம் தேதி இரவு புகார் அளிக்கப்பட்டது. புகாரையடுத்து துரிதமாக செயல்பட்ட போலீசார் குற்றவாளி கமலேஷ் மீனாவை மறுநாளே (செப்.27) கைது செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததை கமலேஷ் ஒப்புக்கொண்டுவிட்டான். கமலேஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து, கமலேஷ் மீனா மீதான பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணை ஜெய்ப்பூர் போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடைபெற்றது. இந்த வழக்கு விசாரணையில் கமலேஷ் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டது. போக்சோ சிறப்பு கோர்ட்டில் இந்த விசாரணை 5 நாட்களில் முடிவடைந்தது.

இந்நிலையில், 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளி கமலேஷ் மீனாவுக்கு நேற்று தண்டனை அறிவிக்கப்பட்டது. அதன்படி, குற்றவாளி கமலேஷ் மீனாவுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து போக்சோ சிறப்பு கோர்ட்டு நீதிபதி விகாஷ் குமார் அதிரடி உத்தரவை பிறப்பித்தார். மேலும், குற்றவாளி கமலேஷுக்கு 2 லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. 

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிக்கு குற்றம் நடைபெற்ற 9 நாட்களில் தீர்ப்பு வழங்கி 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிகழ்வு பாலியல் குற்றங்கள் குறைவதற்கு வழிவகுக்கும் என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்