ராமாயண டிவி சீரியல் நடிகர் மரணம் - பிரதமர் மோடி இரங்கல்

ராமாயண டிவி சீரியல் நடிகர் அரவிந்த் திரிவேதி மரணத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

Update: 2021-10-06 06:08 GMT
புதுடெல்லி,

1987-88 வரை டிடி நேஷனல் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரபல இந்தி டிவி சீரியல் நிகழ்ச்சியான ’ராமாயண்’ தொடரில் ராவணன் கதாப்பாத்திரத்தில் நடித்தவர் அரவிந்த் திரிவேதி. ராவணன் கதாப்பாத்திரத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய அரவிந்த் இந்தி உள்பட பல்வேறு மொழிகளில் டிவி சீரியல்களில் நடித்துள்ளார். 

இதற்கிடையில், 82 வயதான அரவிந்த் திரிவேதி இன்று மரணமடைந்தார். அவரது மரணத்திற்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அதேபோல், பிரபல இந்தி திரைப்பட மற்றும் டிவி சீரியல் நடிகரான கணேஷ்யாம் நாயக் தனது 77 வது வயதில் கடந்த 3-ம் தேதி உயிரிழந்தார். 

இந்நிலையில், அரவிந்த் திரிவேதி மற்றும் கணேஷ்யாம் நாய்க் ஆகிய இரண்டு நடிகர்களின் மரணத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ''கடந்த சில நாட்களில், தங்கள் திறமை மூலம் மக்களின் மனதை வென்ற இரண்டு திறமையான நடிகர்களை நாம் இழந்துள்ளோம். ’தரக் மஹ்டா கா அல்தோ கஷ்மா’ டிவி நிகழ்ச்சி மற்றும் பல்வேறு கதாப்பாத்திரங்கள் மூலம் கணேஷ்யாம் நாயக் நினைவுக்கொள்ளப்படுவார். அவர் மிகவும் கனிவும், தாழ்மையுடனும் இருந்தார். 

நாம் அரவிந்த் திரிவேதியை இழந்துள்ளோம். அவர் சிறந்த நடிகர் மட்டுமல்ல, அவர் பொதுச்சேவையில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். ராமாயண் தொடரில் நடித்ததற்காக அவர் பல தலைமுறை இந்தியர்களாலும் நினைவில் கொள்ளப்படுவார்.  இரு நடிகர்களின் குடும்பங்களுக்கும், ரசிகர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். ஓம் சாந்தி’’ என பதிவிட்டுள்ளார். 

மேலும் செய்திகள்