கேரளா: டீக்கடையில் பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து - 6 பேர் காயம்

கேரளாவில் டீக்கடையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 6 பேர் காயமடைந்தனர்.

Update: 2021-12-21 14:17 GMT
திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் அனிகடு கிராமத்தில் உள்ள டீக்கடை உள்ளது. அந்த டீக்கடையில் இன்று நண்பகல் வாடிக்கையாளர்கள் டீக்குடித்துக்கொண்டிருந்தனர். அப்போது, டீக்கடையில் பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டது. 

இந்த வெடிவிபத்தில் டீக்கடை முழுவதும் சேதமடைந்தது. டீக்கடையில் இருந்த வாடிக்கையாளர்கள் உள்பட 6 பேர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்தவர்களில் ஒருவரின் கை துண்டானது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். படுகாயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும், இந்த வெடி விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். டீக்கடையில் உள்ள சிலிண்டர் வெடித்ததா? என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. அதேவேளை பாறையை உடைக்க பயன்படுத்தப்படும் வெடி மருந்தின் மூலப்பொருள் அருகில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டிருந்ததாகவும் அதன் மூலம் இந்த வெடி விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் செய்திகள்