ஜம்முவில் 700 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து - 4 பேர் பலி

ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கார், ஆழமான பள்ளத்தாக்கில் விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Update: 2022-11-28 14:15 GMT

ஜம்மு,

ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கார், சாலையை விட்டு விலகி ஆழமான பள்ளத்தாக்கில் விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

முன்னதாக இன்று காலை 8.30 மணியளவில் ரம்பன் மாவட்டத்தில் உள்ள கூல்-சங்கல்தான் கிராமத்தைச் சேர்ந்த குடும்பத்தினர் ஜம்முவுக்கு காரில் சென்று கொண்டிருந்தனர். இந்த நிலையில் உதம்பூர் மாவட்டத்தின் செனானி பகுதியில் உள்ள பிரேம் மந்திர் அருகே கார் சென்று கொண்டிருந்த போது சாலையில் இருந்து விலகி 700 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் ஜாமியா மஸ்ஜித் சங்கல்தான் மசூதியின் தொழுகை தலைவரான முப்தி அப்துல் ஹமீத் (வயது 32), அவரது தந்தை முப்தி ஜமால் தின் (வயது 65) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்தில் படுகாயமடைந்த அவரது தாயார் ஹஜ்ரா பேகம் (வயது 60), மருமகன் அடில் குல்சார் (வயது 16) ஆகியோர் மீட்கப்பட்டு உதம்பூர் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இருப்பினும் இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். 4 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனையின் பிணவறை அறைக்கு மாற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்