விஜயாப்புரா, துமகூருவில் நடந்த விபத்துகளில் புதுமண தம்பதி உள்பட 4 பேர் சாவு

விஜயாப்புரா, துமகூருவில் நடந்த விபத்துகளில் புதுமண தம்பதி உள்பட 4 பேர் உயிரிழந்தனர்.

Update: 2023-06-14 21:54 GMT

பெங்களூரு:

புதுமண தம்பதி

விஜயாப்புரா டவுன் பகுதியை சேர்ந்தவர் மல்லு தெர்டால் (வயது 31). தொழிலாளி. இவரது மனைவி காயத்ரி. இவர்களுக்கு கடந்த மாதம் தான் திருமணம் நடந்தது. இந்த நிலையில் புதுமண தம்பதியான மல்லுவும், காயத்ரியும் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றனர். அவர்கள் சோலாப்புரா நெடுஞ்சாலையில் சென்றபோது, மல்லுவின் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிளில் தாறுமாறாக ஓடி, முன்னால் சென்ற டேங்கர் லாரி மீது மோதியது.

இதில், மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட 2 பேரும் தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதுபற்றிய தகவல் அறிந்ததும் விஜயாப்புரா புறநகர் போலீசார் விரைந்து வந்து 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். திருமணமான ஒரு மாதத்தில் புதுமண தம்பதி உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மற்றொரு விபத்து

இதேபோல், துமகூரு மாவட்டம் கொராட்டகெரேவை சேர்ந்தவர்கள் சிவுநாயக், பரமேஷ். இவர்கள் 2 பேரும், கொடிகேனஹள்ளியில் நடந்த நண்பர் வீட்டு திருமணத்தில் பங்கேற்றுவிட்டு திரும்பி காரில் வந்து கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் அக்ரஹாரா பகுதியில் வந்தபோது, அவர்களின் காரும், எதிரே வந்த லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இந்த விபத்தில், காரின் இடிபாடுகளிடையே சிக்கி சிவு நாயக், பரமேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதுபற்றிய தகவல் அறிந்்ததும் கொரட்டகெரே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் போலீசார் 2 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்துக்கள் குறித்து விஜயாப்புரா, கொரட்டகெரே போலீசார் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்