அரியானாவில் பா.ஜனதா ஆட்சிக்கு சிக்கல் இல்லை: முதல் மந்திரி பரபரப்பு பேட்டி

3 சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் ஆதரவை வாபஸ் பெற்றதால், அரியானா அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. ஆனால் தனது அரசுக்கு எந்த சிக்கலும் இல்லை என்று முதல்-மந்திரி கூறியுள்ளார்.

Update: 2024-05-09 02:44 GMT

சண்டிகர்,

அரியானா மாநிலத்தில், முதல்-மந்திரி நயாப்சிங் சைனி தலைமையிலான பா.ஜனதா அரசு நடந்து வருகிறது. 90 உறுப்பினர்களை கொண்ட சட்டசபையில், தற்போது 88 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். பா.ஜனதாவுக்கு 40 எம்.எல்.ஏ.க்களும், காங்கிரசுக்கு 30 எம்.எல்.ஏ.க்களும், ஜனநாயக ஜனதா கட்சிக்கு 10 எம்.எல்.ஏ.க்களும், சுயேச்சைகள் மற்றும் லோக்தளம் கட்சியை சேர்ந்த 8 எம்.எல்.ஏ.க்களும் உள்ளனர்.

பா.ஜனதாவுக்கு அளித்து வந்த ஆதரவை ஜனநாயக ஜனதா கட்சி கடந்த மார்ச் மாதம் வாபஸ் பெற்றது. அதையடுத்து, 6 சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் பா.ஜனதா ஆட்சி நீடித்து வருகிறது. மனோகர்லால் கட்டாருக்கு பதிலாக, நயாப்சிங் சைனி முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். இதற்கிடையே, சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் சோம்பிர் சங்வான், ரந்திர் சிங் கோலன், தரம்பால் கோண்டர் ஆகியோர் பா.ஜனதா அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக நேற்று முன்தினம் அறிவித்தனர். காங்கிரஸ் கட்சியை ஆதரிப்பதாக அறிவித்தனர். இதனால், அரியானா பா.ஜனதா அரசுக்கு அறுதிப்பெரும்பான்மைக்கு 2 எம்.எல்.ஏ.க்கள் குறைவாக இருப்பதாக கருதப்படுகிறது.

இந்நிலையில், அரியானா மாநில காங்கிரஸ் தலைவர் உதய் பான் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

3 சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் அரசுக்கு ஆதரவை வாபஸ் பெற்றுள்ளனர். அதனால் அரசு பெரும்பான்மை இழந்து விட்டது. அது பதவியில் நீடிக்க உரிமை இல்லை. எனவே, மாநில அரசை டிஸ்மிஸ் செய்து ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த பரிந்துரைக்குமாறு அரியானா கவர்னர் பண்டாரு தத்தாத்ரேவுக்கு காங்கிரஸ் கட்சி கடிதம் எழுத போகிறது.அதன்பிறகு புதிதாக சட்டசபை தேர்தல் நடத்த வேண்டும். இதுபோல், ஜனநாயக ஜனதா, லோக்தளம், சுயேச்சை எம்.எல்.ஏ. பல்ராஜ் குண்டு ஆகியோரும் மாநில அரசை டிஸ்மிஸ் செய்யுமாறு கவர்னருக்கு கடிதம் எழுத வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

ஆனால், தனது அரசுக்கு சிக்கல் இல்லை என்று நயாப்சிங் சைனி கூறியுள்ளார். நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்துக்காக சிர்சாவுக்கு சென்ற அவர் அங்கு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-மாநில அரசுக்கு எந்த சிக்கலும் இல்லை. அது வலிமையாக இயங்குகிறது. அரசுக்கு சிக்கல் இருப்பதுபோல் காங்கிரஸ் கட்சி குழப்பத்தை உண்டாக்கி வருகிறது"இவ்வாறு அவர் கூறினார்.

நயாப்சிங் சைனி கடந்த மார்ச் 13-ந் தேதி சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார். மீண்டும் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க அவர் தயாராக இருப்பதாக மாநில பா.ஜனதா வட்டாரங்கள் தெரிவித்தன.

Tags:    

மேலும் செய்திகள்