மராட்டியம்: ஏடிஎம்.மில் கேட்டது ரூ.500: வந்ததோ 2,500... தகவலறிந்து படையெடுத்த மக்கள்..!

மராட்டியத்தில் ஏடிஎம் ஒன்றில் 500 ரூபாய்க்கு பதிலாக 2,500 வந்ததை அறிந்து பணம் எடுப்பதற்காக ஏடிஎம் மில் மக்கள் திரன்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-06-16 07:05 GMT

கோப்புப்படம் 

நாக்பூர்,

மராட்டிய மாநிலம் நாக்பூர் மாவட்டத்தில் நபர் ஒருவர் தனியார் ஏடிஎம்மில் ரூ.500 எடுக்க முயன்றார். ஆனால் அவருக்கு ஐந்து 500 ரூபாய் நோட்டுக்கள் வந்துள்ளன.

இதையடுத்து அவர் மீண்டும் அதே போல 500 ரூபாய் எடுக்க முயன்றபோது, அவருக்கு மீண்டும் ஐந்து 500 ரூபாய் நோட்டுக்கள் வந்துள்ளன. அவருக்கு இரு முறை 500 ரூபாய்க்கு பதிலாக 2 ஆயிரத்து 500 ரூபாய் ஏடிஎம் மில் இருந்து வந்ததால், அதிர்ச்சியடைந்தார்.

இந்த சம்பவம் நேற்று நாக்பூர் நகரத்திலிருந்து 30 கிமீ தொலைவில் உள்ள கபர்கெடா நகரில் உள்ள ஒரு தனியார் வங்கியின் ஏடிஎம் இயந்திரத்தில் நடந்துள்ளது. இந்த தகவல் அப்பகுதியில் காட்டுத்தீ போல் பரவியது. இதனால், சிறிது நேரத்திலேயே ஏடிஎம்-ல் பணம் எடுக்க ஏராளமானோர் திரண்டனர்.

இதனை கண்ட வங்கி வாடிக்கையாளர்களில் ஒருவர் போலீசாருக்கு இது குறித்து தகவல் தெரிவித்தார். தகவலறிந்து வந்த போலீசார், உடனடியாக ஏடிஎம்மை மூடினார். அதுவரையில் மக்கள் அந்த ஏடிஎம்மில் பணம் எடுத்துள்ளனர்.

உடனடியாக வங்கிக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் விசாரணையில், ஏடிஎம்மில் 100 ரூபாய் வைக்கக்கூடிய தட்டில் 500 ரூபாய் தவறாக வைக்கப்பட்டதால் இது நடந்துள்ளதாக அதிகாரி ஒருவர் கூறினார். இது தொடர்பாக இதுவரை எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்

Tags:    

மேலும் செய்திகள்