'ஹலால்' தரச்சான்று விவகாரம்; ஏற்றுமதி உணவுகளுக்கு விலக்கு - உத்தர பிரதேச அரசு அறிவிப்பு
இந்தியாவில் உணவு பொருட்களுக்கு ஹலால் தரச்சான்று வழங்குவது கட்டாயமாக்கப்படவில்லை.;
Image Courtesy : ANI
லக்னோ,
இஸ்லாமிய மார்க்கத்தில் விலங்குகளை கொல்வதற்கும், அவற்றை பதப்படுத்தி உண்பதற்கும் சில விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இந்த விதிகளை பின்பற்றாமல் தயாரிக்கப்பட்ட உணவை உண்பதை இஸ்லாம் தடை செய்துள்ளது. இது அரபு மொழியில் 'ஹராம்' என்று அழைக்கப்படுகிறது.
அதே சமயம் இஸ்லாமிய விதிகளுக்கு உட்பட்டு தயாரிக்கப்பட்ட உணவு, 'ஹலால்' என்று அழைக்கப்படுகிறது. இவ்வாறு தயார் செய்யப்பட்ட உணவுகளுக்கு ஹலால் தரச்சான்று வழங்கப்படுகிறது. இந்தியாவில் உணவு பொருட்களுக்கு ஹலால் தரச்சான்று வழங்குவது கட்டாயமாக்கப்படவில்லை. இருப்பினும் சில தனியார் நிறுவனங்கள் ஹலால் தரச்சான்று வழங்கி வருகின்றன.
இந்த நிலையில் உத்தர பிரதேச மாநிலத்தில் ஹலால் தரச்சான்று பெற்ற பொருட்களை விற்பனை செய்ய அந்த மாநில அரசு தடை விதித்துள்ளது. ஹலால் தர சான்றுடன் கூடிய உணவுப் பொருட்களின் உற்பத்தி, விநியோகம் மற்றும் விற்பனை ஆகியவை உடனடியாக தடை செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
அதே சமயம், ஏற்றுமதிக்காக தயார் செய்யப்படும் பொருட்களுக்கு இந்த தடையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகளை மீறி செயல்படும் தனிநபர் மற்றும் நிறுவனத்துக்கு எதிராக சட்ட ரீதியாக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உத்தர பிரதேச அரசு தெரிவித்துள்ளது.