டெல்லியில் தண்ணீர் பஞ்சம் ஏற்படுத்த பா.ஜ.க. முயற்சிக்கிறது - அதிஷி குற்றச்சாட்டு

யமுனை நதியிலிருந்து டெல்லிக்கு கிடைக்கும் நீரை நிறுத்தி, பாஜக சதி செய்ய திட்டமிட்டிருப்பதாக டெல்லி மந்திரி அதிஷி தெரிவித்துள்ளார்.

Update: 2024-05-22 09:49 GMT

புதுடெல்லி,

டெல்லி மாநில மதுபான கொள்கை ஊழல் தொடர்பாக அம்மாநில முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டார். இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டு அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியதை அடுத்து அவர் தற்போது தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இதனிடையே கெஜ்ரிவாலை அவரது இல்லத்தில் பார்க்க வந்த எம்.பி. சுவாதி மாலிவால் தாக்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக கெஜ்ரிவால் உதவியாளர் பிபவ் குமாரை டெல்லி மாநில போலீசார் கைது செய்துள்ளனர்.இந்த விவகாரத்தில் சுவாதி, பா.ஜ.க.வுக்கு ஆதரவாக செயல்படுவதாக ஆம் ஆத்மி கட்சி கடுமையாக விமர்சித்து வருகிறது.

இந்த நிலையில் டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த டெல்லி மந்திரி அதிஷி, "டெல்லி மாநில மக்கள் 7 தொகுதிகளையும் இந்தியா கூட்டணிக்கு வழங்க முடிவு செய்து விட்டார்கள். இதனால்தான் பா.ஜ.க. தற்போது அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி கட்சிக்கு எதிராக பல்வேறு சதித்திட்டங்களை தீட்டி வருகிறது. தேர்தல் அறிவிக்கப்பட்ட ஐந்தே நாட்களில் எவ்விதமான ஆதாரமும் இல்லாமல் அமலாக்கத்துறை அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்தனர்.

மேலும், டெல்லியில் வரும் 25ம் தேதி மக்களவை தேர்தல்களுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக யமுனை நதியின் நீரை தடுத்து நிறுத்தி, டெல்லியில் குடிநீர் பஞ்சத்தை ஏற்படுத்த பா.ஜ.க. திட்டம் தீட்டி வருகிறது. இதன் மூலம் ஆம் ஆத்மி கட்சி மற்றும் அரவிந்த் கெஜ்ரிவால் அரசு மீது அவதூறை பரப்ப பா.ஜ.க. முடிவு செய்துள்ளது. இதற்காக அரியானா ஆளும் பா.ஜ.க. அரசுடன் கைகோர்த்து யமுனை நதியின் நீரை தடுத்து நிறுத்த திட்டம் தீட்டி வருகிறார்கள்" என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்