தமிழ் உட்பட 13 பிராந்திய மொழிகளில் மத்திய ஆயுதப்படை காவலர் தேர்வு - உள்துறை அமைச்சகம் முடிவு

மத்திய ஆயுதப்படை காவலர் தேர்வை தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் எழுதலாம் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Update: 2024-02-11 09:35 GMT

கோப்புப்படம்

புதுடெல்லி,

சி.ஆர்.பி.எப். , பி.எஸ்.எப்., சி.ஐ.எஸ்.எப் போன்ற மத்திய ஆயுதப்படை காவலர் தேர்வு இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் நடத்தப்பட்டு வந்தது. இதனால் பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் தங்களது மாநில மொழிகளில் தேர்வு எழுத மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தனர்.

மாநில அரசுகளும், கட்சித் தலைவர்களும் அந்ததந்த மாநில மொழிகளில் தேர்வு எழுத அனுமதிக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்த நிலையில் இனிமேல் மத்திய ஆயுதப்படை காவலர் தேர்வை தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் எழுதலாம் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் வழிகாட்டுதலின்பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய ஆயுதப்படை காவலர் பணிக்கான தேர்வு மார்ச் 7-ந்தேதி வரை நடைபெறுகிறது. இதில் 48 லட்சம் பேர் தேர்வு எழுதுகிறார்கள். நாட்டின் 128 நகரங்களில் இந்த தேர்வு நடத்தப்படுகிறது. தமிழ், அசாமி, பெங்காலி, குஜராத்தி, மராத்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஒடியா, உருது, பஞ்சாபி, மணிப்பூரி, கொங்கனி ஆகிய பிராந்திய மொழிகளில் தேர்வு நடத்தப்படும்.

Tags:    

மேலும் செய்திகள்