ஜெயலலிதாவின் பொருட்களை உரிமை கோரிய ஜெ.தீபாவின் மனு நிராகரிப்பு- பெங்களூரு கோர்ட்டு அதிரடி உத்தரவு

ஜெயலலிதாவின் பொருட்களை உரிமை கோரிய ஜெ.தீபாவின் மனுவை நிராகரித்த பெங்களூரு கோர்ட்டு, பறிமுதல் செய்த சொத்துகளை வாரிசுதாரர்களிடம் ஒப்படைக்க முடியாது என்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

Update: 2023-07-13 18:45 GMT

பெங்களூரு:

சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பெங்களூரு தனிக்கோர்ட்டு தீர்ப்பு கூறியது. இதுகுறித்த மேல்முறையீட்டு வழக்கில் கர்நாடக ஐகோர்ட்டு, அந்த தண்டனையை ரத்து செய்தது. இதற்கு எதிராக கர்நாடக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு, தனிக்கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை உறுதி செய்து உத்தரவிட்டது. ஜெயலலிதா மரணம் அடைந்ததால் தீர்ப்பில் இருந்து அவரது பெயர் நீக்கப்பட்டது. அதே நேரத்தில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய 3 பேரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனையை அனுபவித்து விடுதலை ஆகினர்.

இந்த நிலையில் பெங்களூருவை சேர்ந்த சமூக ஆர்வலர் நரசிம்மமூர்த்தி, பெங்களூரு சிட்டி சிவில் மற்றும் செசன்சு கோர்ட்டில் மனு தாக்கல் செய்து, சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட ஜெயலலிதாவின் பொருட்களை ஏலம் விடுமாறு உத்தரவிடக் கோரினார். இந்த வழக்கில் அரசு சிறப்பு வக்கீலாக கிரண் ஜவலி நியமிக்கப்பட்டார்.

இந்த நிலையில் ஜெயலலிதாவின் வாரிசுகளான ஜெ.தீபா, ஜெ.தீபக் ஆகியோர் பெங்களூரு சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்து, தாங்கள் ஜெயலலிதாவின் வாரிசுகள் என்றும், அதனால் அவரது இந்த பொருட்கள் தங்களுக்கு சேர வேண்டும் என்றும் கோரினர். இந்த வழக்கில் வாதாடிய அரசு சிறப்பு வக்கீல் கிரண் ஜவலி, சொத்து குவிப்பு வழக்கில் 3 பேர் சிறை தண்டனை அனுபவித்ததாகவும், அதனால் ஜெ.தீபா, ஜெ.தீபக் ஆகியோரின் மனுவை நிராகரிக்க வேண்டும் என்றும் கூறினார்.

இந்த நிலையில் இந்த வழக்கில் தீர்ப்பு அளித்த பெங்களூரு சிறப்பு கோர்ட்டு நீதிபதி மோகன், ஜெ.தீபா, ஜெ.தீபக் ஆகியோரின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். அப்போது நீதிபதி, சொத்து குவிப்பு வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டவர் இறந்துவிட்டார் என்ற காரணத்திற்காக வழக்கில் பறிமுதல் செய்த சொத்துகளை வாரிசுதாரர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க முடியாது என்றார்.

மேலும் ஜெயலலிதாவின் 29 வகையான பொருட்களில் 30 கிலோ தங்கம் உள்ளிட்ட ஆபரணங்கள் மட்டுமே தற்போது இங்கு உள்ளதாகவும், மீதமுள்ள 28 பொருட்கள் குறித்து தகவலை சமூக ஆர்வலர் நரசிம்மமூர்த்திக்கு தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவிக்க வேண்டும் என்றும் கூறி நீதிபதி வாய் மொழியாக உத்தரவிட்டார்.

இதுகுறித்து சமூக ஆர்வலர் நரசிம்மமூர்த்தி கூறுகையில், "சொத்து குவிப்பு வழக்கில் 29 வகையான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதில் 30 கிலோ தங்கம் உள்ளிட்ட ஆபரணங்கள் மட்டுமே இங்கு உள்ளன. மீதமுள்ள 28 வகையான பொருட்கள் குறித்த தகவல் தெரியவில்லை.

இதுகுறித்த தகவலை எனக்கு தெரிவிக்க வேண்டும் என்று தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. நான் சில நாட்கள் பொறுத்திருந்து பார்ப்பேன். இந்த தகவல் கிடைக்காவிட்டால், நான் தகவல் பெறும் உரிமை சட்டம் மூலம் போராடுவேன்" என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்