அமலாக்கத்துறை விசாரணையை தவிர்த்த விவகாரம் - கெஜ்ரிவால் நேரில் ஆஜராக டெல்லி கோர்ட்டு சம்மன்

இதுவரை அமலாக்கத்துறை 5 முறை சம்மன் அனுப்பியும் டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் விசாரணைக்கு ஆஜராகவில்லை.

Update: 2024-02-07 12:47 GMT

புதுடெல்லி,

டெல்லி அரசின் மதுபான கொள்கையை அமல்படுத்தியதில் முறைகேடு நடைபெற்றதாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதில் சட்ட விரோத பணபரிமாற்றம் நடைபெற்று இருப்பதாக அமலாக்கத்துறையும் தனியாக வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் டெல்லி துணை முதல்-மந்திரியாக இருந்த மணீஷ் சிசோடியா ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார்.

இதையடுத்து, டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலிடம் விசாரணை நடத்த, கடந்த ஆண்டு நவம்பர் 2, டிசம்பர் 21 ஆகிய தேதிகளில் ஆஜராகுமாறு அமலாக்கத்துறை அவருக்கு சம்மன் அனுப்பி இருந்தது. ஆனால் அவர் ஆஜராகவில்லை. அதன்பிறகு கடந்த ஜனவரி 3-ந்தேதியும், 18-ந்தேதியும் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது. இதையும் கெஜ்ரிவால் புறக்கணித்தார்.

தொடர்ந்து 5-வது முறையாக கடந்த 2-ந்தேதி விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பியது. ஆனால் 5-வது முறையும் அமலாக்கத்துறை விசாரணையை கெஜ்ரிவால் தவிர்த்துவிட்டார். இந்த நிலையில் கெஜ்ரிவால் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை எனக்கூறி டெல்லி கோர்ட்டில் அமலாக்கத்துறை தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அமலாக்கத்துறையின் விசாரணையை 5 முறை தவிர்த்தது ஏன் என்பது தொடர்பாக டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் வரும் 17-ந்தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்