நீண்ட நேரம் உல்லாசமாக இருக்க வற்புறுத்தல்: பெண் கொலை வழக்கில் வாலிபர் கைது

கடந்த 19-ந் தேதி ஷோபா, நவீனை தனது வீட்டுக்கு அழைத்துள்ளார்.

Update: 2024-04-24 15:43 GMT

பெங்களூரு,

பெங்களூருவில், வீட்டில் தனியாக வசித்த 56 வயது பெண் கொலை வழக்கில் அவரது கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டுள்ளார். நீண்ட நேரம் உல்லாசமாக இருக்க வற்புறுத்தியதால் கொலை செய்ததாக அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

பெங்களூரு கொடிகேஹள்ளி அருகே பத்திரப்பா குடியிருப்பில் வசித்து வந்தவர் ஷோபா(வயது 56). இவருக்கு திருமணமாகி 2 மகள்கள் உள்ளனர். அவர்கள் 2 பேருக்கும் திருமணம் முடிந்துவிட்டது. தற்போது அவர்கள் அந்த பகுதியில் தனித்தனியே வசித்து வருகின்றனர்.

இதனால் ஷோபா மட்டும் தனியாக வசித்து வந்தார். அவ்வப்போது அவரது மகள்கள் வந்து, ஷோபாவை சந்தித்துவிட்டு செல்வார்கள் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 19-ந் தேதி அன்று காலையில் ஷோபாவை செல்போன் மூலம் அவரது மூத்த மகள் தொடர்பு கொண்டார். ஆனால் ஷோபா செல்போனை எடுத்து பேசவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவருடைய மகள், தனது தாய் ஷோபாவை பார்க்க அவரது வீட்டுக்கு சென்றார்.

அப்போது வீட்டின் கதவு திறந்து கிடந்தது. இதையடுத்து அவர் வீட்டிற்குள் சென்று பார்த்தார். அப்போது வீட்டில் உள்ள படுக்கை அறையில் ஷோபா நிர்வாண நிலையில் பிணமாக கிடந்தார். இதைக்கண்டு அவரது மகள் அதிர்ச்சியும், பதற்றமும் அடைந்தார். மேலும் அலறி துடித்து கதறி அழுதார். அவரது கூச்சல் சத்தத்தைக் கேட்ட அக்கம்பக்கத்தினர் ஷோபாவின் வீட்டுக்கு ஓடி வந்தனர்.

அவர் வீட்டில் ஷோபா நிர்வாண நிலையில் பிணமாக கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இதுபற்றி கொடிகேஹள்ளி போலீசில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு ஷோபாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்தனர். மேலும் ஷோபாவின் செல்போன் எண்ணையும் கைப்பற்றி சைபர் கிரைம் மூலம் ஆய்வு செய்தனர்.

ஷோபாவுடன் அடிக்கடி செல்போனில் தொடர்பு கொண்டு பேசியவர்கள் யார்?, சமூக வலைத்தளங்கள் மூலம் அவருடன் தொடர்பில் உள்ளவர்கள் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது பெங்களூரு பனசங்கரி அருகே ஹேரோஹள்ளி பகுதியைச் சேர்ந்த ஐ.டி. ஊழியரான நவீன் கவுடா(24) என்ற வாலிபர் இன்ஸ்டாகிராம் மூலம் ஷோபாவுடன் தொடர்பில் இருந்ததும், இருவரும் அடிக்கடி இன்ஸ்டாகிராமில் பேசி வந்ததும் தெரியவந்தது. மேலும் இருவரும் தங்களது செல்போன் எண்களையும் பரிமாறி பேசி வந்துள்ளனர்.

அதையடுத்து போலீசார் நவீனை பிடித்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன. போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் ஷோபாவை, கொலை செய்ததை நவீன் ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளித்துள்ளார்.

அதாவது தனியாக வசித்து வந்த ஷோபா, இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தள பக்கங்களில் அடிக்கடி தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வந்துள்ளார். அவ்வாறு நவீனுக்கும், ஷோபாவுக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் தங்களது செல்போன் எண்களை பரிமாறி பேசி வந்துள்ளனர். இந்த பழக்கத்தின் அடிப்படையில் இருவரும் நேரில் சந்தித்து தங்களது நட்பை வளர்த்தனர். ஒரு கட்டத்தில் இது அவர்களுக்கு இடையே கள்ளக்காதலாக மாறியது. அதையடுத்து இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் கடந்த 19-ந் தேதி ஷோபா, நவீனை தனது வீட்டுக்கு அழைத்துள்ளார். அதன்பேரில் நவீனும், ஷோபாவின் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர். இந்த சந்தர்ப்பத்தில் நீண்ட நேரம் உல்லாசமாக இருக்கும்படி ஷோபா வற்புறுத்தி உள்ளார். அவரது இந்த மோசமான செயலை தாங்க முடியாத நவீன், ஷோபாவை கண்டித்துள்ளார். ஆனால் அவர் அதை கேட்காததால், ஷோபாவை நவீன் சரமாரியாக தாக்கி இருக்கிறார். பின்னர் அவரது அடிவயிற்றில் சரமாரியாக தாக்கியும், கழுத்தை நெரித்தும் ஷோபாவை நவீன் கொலை செய்துள்ளார். அதையடுத்து நிர்வாண நிலையில் கிடந்த ஷோபாவின் உடலை அப்படியே போட்டுவிட்டு நவீன் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

அதையடுத்து போலீசார் கள்ளக்காதலன் நவீனை கைது செய்தனர். பின்னர் அவரை பெங்களூரு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். வீட்டில் தனியாக வசித்த பெண் கொலை வழக்கில் கள்ளக்காதலன் கைதாகி இருப்பது பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்