விவசாயிகள் நலனை அரசு உறுதி செய்வதில் ஒரு விசயமும் கைவிடப்படவில்லை: பிரதமர் மோடி பேச்சு

விவசாயிகளுக்கு நவீன தொழில் நுட்பம் வழங்கப்பட வேண்டும் என்பதே நம்முடைய இலக்கு ஆகும் என பிரதமர் மோடி பேசியுள்ளார்.

Update: 2024-02-22 09:23 GMT

ஆமதாபாத்,

குஜராத்தின் ஆமதாபாத் நகரில் நடந்த குஜராத் கூட்டுறவு பால் சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பின் பொன்விழா கொண்டாட்ட நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, விவசாயிகள் நலனை மத்திய அரசு உறுதி செய்வதில் எந்த ஒரு விசயமும் கைவிடப்படவில்லை. நாடு முழுவதும் 60 ஆயிரத்திற்கும் கூடுதலான அமுத சரோவர்கள் கட்டி எழுப்பப்பட்டு உள்ளன என கூறினார்.

இந்த அமுத சரோவர்கள் என்பது நாடு முழுவதும் உள்ள நீர்நிலைகளை பாதுகாக்கும் நோக்கம் கொண்டது. இதன்படி, ஒவ்வொரு மாவட்டத்திலும் 75 நீர்நிலைகளை வளர்ச்சி பெற மற்றும் மறுசீரமைப்பு செய்யும் பணியை இலக்காக கொண்டு இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.

இந்த திட்ட தொடக்கம் ஆனது விவசாயிகளுக்கு பலனளிப்பது மட்டுமின்றி, கிராமப்புற பொருளாதாரம் வலுப்பெறவும் உதவும் என்று பிரதமர் மோடி கூறினார்.

அவர்களுக்கு நவீன தொழில் நுட்பம் வழங்கப்பட வேண்டும் என்பதே நம்முடைய இலக்கு ஆகும். அதனுடன், நாட்டின் சிறிய விவசாயிகளும் கூட அதனை பற்றிய விவரங்களை தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்