தொழில் அதிபரை தாக்கிய வழக்கில் 3 பேருக்கு தலா 5 ஆண்டு சிறை

தொழில் அதிபரை தாக்கிய வழக்கில் 3 பேருக்கு தலா 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து தார்வார் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

Update: 2023-06-18 18:45 GMT

உப்பள்ளி-

தொழில் அதிபரை தாக்கிய வழக்கில் 3 பேருக்கு தலா 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து தார்வார் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

தொழிலதிபர்

தார்வார் (மாவட்டம்) டவுன் ஒசேலாபுரா பகுதியை சேர்ந்தவர் அனுமந்தா. தொழிலதிபர். இவர் அதேப்பகுதியை சேர்ந்த நிகிலுக்கு ரூ.30 ஆயிரம் கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் நிகில், அனுமந்தாவுக்கு பணத்தை திருப்பி கொடுக்கவில்லை. இதனால் அவர்கள் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்தநிலையில் கடந்த 2020-ம் ஆண்டு ஜூலை மாதம் 30-ந் தேதி அனுமந்தா, நிகிலிடம் கொடுத்த பணத்தை திரும்ப கேட்டார். அதற்கு அவர் சரியாக பதில் கூறவில்லை. இதனால் அவர்கள் 2 பேரும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. அவர்களை அருகில் இருந்தவர்கள் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

இந்தநிலையில் அனுமந்தா டவுன் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அப்போது, அந்த வழியாக வந்த நிகில் உள்பட 3 பேர் அனுமந்தாவின் மோட்டார் சைக்கிளை வழிமறித்தனர். அப்போது அவரிடம் 3 பேர் தகராறு செய்தனர்.

5 ஆண்டு சிறை

தகராறு முற்றிய நிலையில் அவர்கள், அனுமந்தாவை சரமாரியாக தாக்கி, கத்தியால் குத்தி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.

இதுகுறித்து தார்வார் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து நிகில் உள்பட 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் வெளியே வந்தனர். இதுதொடர்பான வழக்கு தார்வார் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்தநிலையில் வழக்கு முடிவடைந்ததை தொடர்ந்து நீதிபதி சாந்தி நேற்று முன்தினம் தீர்ப்பு கூறினார். அதில், குற்றம் சாட்டப்பட்ட நிகில் உள்பட 3 பேருக்கு தலா 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.8,500 அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.


Tags:    

மேலும் செய்திகள்