கர்நாடகா முதல்-மந்திரி சித்தராமையா மீது வழக்கு தொடர கவர்னர் ஒப்புதல்
மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரில் சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்ய கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளார்.;
File image
பெங்களூரு,
கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு சொந்தமான 3.9 ஏக்கர் நிலத்தை மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு கழகம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கையகப்படுத்தியது. அவருக்கு மாற்று நிலம் ஒதுக்கப்பட்டது. அவரிடம் கையகப்படுத்திய நிலத்தின் மதிப்பைவிட, மாற்றாக வழங்கப்பட்ட நிலத்தின் மதிப்பு பன்மடங்கு அதிகமாக இருந்ததால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இதில் ரூ.3 ஆயிரம் கோடி அளவுக்கு ஊழல் நடந்திருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து, ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகி உள்ள முதல்-மந்திரி சித்தராமையா பதவி விலக வேண்டும் என பாஜக, மஜத கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில், முதல்-மந்திரி சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர் டி.ஜே.ஆபிரகாம் அம்மாநில கவர்னர் தாவர் சந்த் கெலாட்டை நேரில் சந்தித்து பேசியுள்ளார். இதையடுத்து ஆபிரகாம் அளித்த புகார் குறித்து வழக்குப்பதிவு செய்ய கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளார். இதனால் சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்யப்படவுள்ளது.