மாணவர்களை வைத்து வீட்டு கழிவறையை சுத்தம் செய்த தனியார் பள்ளி முதல்வர்..!

இந்த சம்பவம் குறித்து மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளி முதல்வரை சந்தித்து எச்சரித்துள்ளனர்.

Update: 2024-01-17 12:31 GMT

கலபுரகி,

கர்நாடகத்தில் பள்ளி கழிவறைகளை மாணவர்களை கொண்டு சுத்தம் செய்ய வைத்த சம்பவங்கள் சிவமொக்கா, கோலார், பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று இருந்தன. இதுதொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில் கலபுரகியில் பள்ளி முதல்வர் தனது வீட்டு கழிவறையை மாணவர்களை கொண்டு சுத்தம் செய்ய வைத்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது.

கலபுரகி டவுன் மலகட்டி சாலையில் தனியார் பள்ளி ஒன்று உள்ளது. இந்த பள்ளியின் முதல்வராக ஜோகர் சபீனா என்பவர் இருந்து வருகிறார். இவர் தனது பள்ளியில் படிக்கும் மாணவர்கள் சிலரை, தனது வீட்டு வேலைகளை செய்ய வைத்துள்ளார். குறிப்பாக வீட்டு கழிவறைகளையும் சுத்தம் செய்ய வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவர்களின் பெற்றோருக்கு தெரியவந்துள்ளது. உடனே அவர்கள் இதுகுறித்து பள்ளி முதல்வரை சந்தித்து எச்சரித்துள்ளனர்.

மேலும் இனி இதுபோன்ற செயல்களில் மாணவர்களை ஈடுபடுத்தினால் போலீசில் புகார் அளிப்பதாக கூறி உள்ளனர். எனினும் பள்ளி முதல்வர் தொடர்ந்து மாணவர்களை சொந்த வேலைகளில் ஈடுபடுத்தி வந்துள்ளார். இதையடுத்து மாணவர்களின் பெற்றோர் கலபுரகி டவுன் போலீசில் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்