பொன்முடி பதவிப்பிரமாண விவகாரம்: கவர்னருக்கு உத்தரவிடக்கோரிய மனு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை

பொன்முடிக்கு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க கவர்னர் ஆர்.என்.ரவி மறுப்பு தெரிவித்தார்.

Update: 2024-03-21 01:32 GMT

புதுடெல்லி,

சொத்து குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் க.பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.50 லட்சம் அபராதம் விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதை எதிர்த்து, பொன்முடி சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டார். இந்த வழக்கில், ஐகோர்ட்டு விதித்த தண்டனை மற்றும் அபராதத்தை நிறுத்தி வைத்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

இதையடுத்து அவருடைய தகுதி நீக்கம் ரத்தாகி மீண்டும் திருக்கோவிலூர் எம்,எல்,ஏ. ஆனார். இதைத்தொடர்ந்து அவருக்கு மீண்டும் அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க கவர்னருக்கு முதல்-அமைச்சர் பரிந்துரைத்தார். ஆனால் அதற்கு கவர்னர் ஆர்.என்.ரவி மறுப்பு தெரிவித்தார்.

இதையடுத்து, திருக்கோவிலூர் தி.மு.க. எம்.எல்.ஏ. பொன்முடிக்கு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க கவர்னருக்கு உத்தரவிட கோரி தமிழ்நாடு அரசின் சார்பில் வக்கீல் சபரீஷ் சுப்ரமணியன் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். முறையீட்டை பரிசீலிப்பதாக தலைமை நீதிபதி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பொன்முடி பதவிப்பிரமாண விவகாரம் தொடர்பான மனு நீதிபதி தலைமையிலான அமர்வில் இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்