தமிழ்நாட்டில் 97.8 சதவீத கிராமங்களில் கழிவறை வசதி - மத்திய அரசு தகவல்

தமிழ்நாட்டில் 97.8 சதவீத கிராமங்களில் கழிவறை வசதி உருவாக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Update: 2023-05-10 19:13 GMT

புதுடெல்லி,

இரண்டாம் கட்ட கிராமப்புற தூய்மை இந்தியா இயக்கத்தின் கீழ் திறந்தவெளியில் மலம் கழிக்காத நிலையை நாட்டின் 50 சதவீத கிராமங்கள் எட்டியுள்ளன. தமிழ்நாட்டில் 97.8 சதவீத கிராமங்கள் இந்த நிலையை அடைந்துள்ளன. தெலுங்கானாவின் அனைத்து கிராமங்களும், கர்நாடகாவில் 99.5 சதவீத கிராமங்களும், உத்தரபிரதேசத்தில் 95.2 சதவீத கிராமங்களும் திறந்தவெளியில் மலம் கழிக்காத நிலைக்கு முன்னேறியுள்ளன.

யூனியன் பிரதேசங்களை பொறுத்தவரை அந்தமான் நிக்கோபார் தீவுகள், தாத்ரா நாகர்ஹவேலி, டாமன்-டையு மற்றும் லட்சத்தீவுகள் ஆகியவை 100 சதவீத இலக்கை எட்டியுள்ளன.

இந்த கிராமங்களில் திறந்தவெளியில் மலம் கழிக்காத நிலை ஏற்படுத்தப்பட்டிருப்பதோடு, திட அல்லது திரவக்கழிவு மேலாண்மை அமைப்புமுறையும் அமல்படுத்தப்படுகிறது. இதுவரை 2.96 லட்சம் கிராமங்கள் இந்த நிலையை எட்டியுள்ளதன் மூலம் 2024-2025-ம் ஆண்டுக்குள் 2-ம் கட்ட கிராமப்புற தூய்மை இந்தியா இயக்கத்தின் லட்சியங்களை அடையும் உத்வேகம் கிடைத்துள்ளது.

2014-2015 முதல் 2021-2022 வரை கிராமப்புற தூய்மை இந்தியா இயக்கத்துக்காக மத்திய அரசு ரூ.83,938 கோடியை ஒதுக்கியது. 2023-2024-ல் இந்த இயக்கத்துக்காக ஒதுக்கப்பட்ட தொகை ரூ.52,137 கோடியாகும். இது தவிர 15-வது நிதிக்குழுவின் ஒதுக்கீட்டுத் தொகையும் இந்த இயக்கத்துக்கு வழங்கப்படுகிறது.

இந்த தகவல்களை மத்திய ஜல்சக்தி அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்