உத்தரபிரதேசம்: ஆட்டோ மீது லாரி மோதியதில் 6 பேர் பலி

இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2024-04-02 07:35 GMT

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் சித்ரகூட் மாவட்டத்தில் உள்ள கார்வி பகுதியில் ஆட்டோ ஒன்று 8 பயணிகளுடன் நேற்று நள்ளிரவு சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த லாரி ஆட்டோ மீது பயங்கரமாக மோதியது.

இந்த கோர விபத்தில் ஆட்டோவில் இருந்த 8 பயணிகள் பலத்த காயமடைந்தனர். இந்த விபத்து குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த விபத்தில் பிரயாக் ராஜு என்பவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார் என்று போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.

மேலும் இந்த விபத்தில் 5 பேர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தனர். இதனால் இந்த விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்த சூரஜ் (20) மற்றும் சுமித் (14) ஆகிய இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்தில் இறந்தவர்கள் அனிருத் (30), அகிலேஷ் (22), அதர் சிங் (50), தர்மேந்திர சோனி (30), மற்றும் நிதி சோனி என அடையாளம் காணப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்