வேலூரில் உணவகத்தின் சுவர் இடிந்து விழுந்து 2 பேர் உயிரிழப்பு - உணவகத்திற்கு சீல்

வேலூரில் உணவகத்தின் சுவர் இடிந்து விழுந்து 2 பேர் உயிரிழந்தனர்.

Update: 2023-09-18 11:02 GMT

வேலூர்,

வேலூர் பழைய பஸ் நிலையத்தில் தனியார் ஓட்டல் இயங்கி வந்ததது. இந்த ஓட்டலில் உள்ள சமையல் கூட சுற்றுச்சுவரின் ஒரு பகுதி நேற்று இரவு பெய்த மழையின் காரணமாக இடிந்து விழுந்தது. இடிந்து விழுந்த கட்டிட கழிவுகளை அப்புறப்படுத்தும் பணி இன்று நடந்தது.

சலவன் பேட்டையை சேர்ந்த ராமமூர்த்தி (வயது 50). கருகம்புத்தூரை சேர்ந்த வெண்ணிலா, மற்றொரு பெண் ஆகியோர் பணியில் ஈடுபட்டனர். அவர்கள் கட்டிட இடிபாடுகளை அகற்றிக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென எதிர்பாராத விதமாக மீதி இருந்த சுவர் இடிந்து பணியில் ஈடுபட்டவர்கள் மீது விழுந்தது. இடிபாடுகளில் சிக்கி 3 பேரும் படுகாயம் அடைந்தனர்.

படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். மூன்று பேரில் பெண் ஒருவர் பாதி வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ராமமூர்த்தி, மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வெண்ணிலாவுக்கு ஆஸ்பத்திரியில் தீவிரி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வேலூர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் உணவகத்தின் சுவர் இடிந்து விழுந்து பெண் உயிரிழந்த விவகாரத்தில் உணவக உரிமையாளரை கைது செய்து, உணவகத்திற்கு வருவாய் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்