பிறப்பு, இறப்பு பதிவில் காலதாமதக் கட்டணத்தில் இருந்து விலக்கு - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

பிறப்பு, இறப்பு பதிவில் காலதாமதக் கட்டணத்தில் இருந்து விலக்கு அளிப்பதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Update: 2021-06-08 08:54 GMT
சென்னை,

தமிழ்நாட்டில் தற்போதைய நடைமுறையின்படி, இறப்பு நிகழ்வு நடந்து 21 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட பிறப்பு/இறப்பு பதிவாளரிடம் தகவல் தெரிவித்தல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த காலக்கட்டத்திற்கு பின் அதாவது 21 நாட்களுக்கு மேல் 30 நாட்கள் வரை காலதாமதக் கட்டணம் ரூ.100 ஆகவும், 30 நாட்களுக்குப் பின் ஓராண்டிற்குள் காலதாமதக் கட்டணம் ரூ.200 ஆகவும், ஓராண்டிற்கு மேல் காலதாமதக் கட்டணம் ரூ.500 ஆகவும் உள்ளது.

இந்த நிலையில் கொரோனா பெருந்தொற்று காலத்தில் இந்த காலதாமத கட்டணம், பொதுமக்களுக்கு சுமையை ஏற்படுத்து வருவதாகவும், இது குறித்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் முதல்-அமைச்சர் ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் பிறப்பு, இறப்பு பதிவில் காலதாமதக் கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “கொரோனா பெருந்தொற்று காலகட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் / கிராமங்களில், 1-1-2020 முதல் நிகழ்ந்த பிறப்பு/இறப்பு குறித்து காலதாமதமாக பதிவு செய்யப்பட்ட விண்ணப்பங்களுக்கு பிறப்பு/இறப்பு விதிகளில் வரையறுக்கப்பட்ட காலதாமத கட்டணத்தை வசூலிக்கப்படுவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

காலதாமத கட்டண விலக்கினால் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஏற்படக்கூடிய வருவாய் இழப்பீட்டினை உள்ளாட்சி அமைப்புகளுக்கு தமிழ்நாடு அரசே ஈடுசெய்யும். இருப்பினும், உரிய காலத்தில் பிறப்பு/இறப்பினைப் பதிவு செய்ய அனைவரின் ஒத்துழைப்பும் வேண்டப்படுகிறது.” 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்