போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தாக்கியதில் உயிரிழந்த முருகேசன் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி மு.க.ஸ்டாலின் உத்தரவு

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தாக்கியதில் உயிரிழந்த முருகேசன் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதி வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.

Update: 2021-06-23 20:16 GMT
சென்னை,

சேலம் மாவட்டம், இடையப்பட்டி கிராமத்தை சேர்ந்த முருகேசன் மற்றும் அவரது நண்பர்கள் இருவர் 22-ந்தேதி (நேற்று முன்தினம்) இருசக்கர வாகனத்தில் சென்றபோது, சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன் பாளையம் வட்டம், மலையாளபட்டி கிராமத்தில் உள்ள வனசோதனைச்சாவடியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த ஏத்தாப்பூர் காவல் துறையினர் அவர்களை தணிக்கை செய்துள்ளனர்.

அப்போது காவல் துறையினருக்கும், இருசக்கர வாகனத்தில் வந்தவர்களுக்கும், தகராறு ஏற்பட்டதன் விளைவாக, ஆத்திரமடைந்த சிறப்புக் காவல் உதவி ஆய்வாளர் (சப்-இன்ஸ்பெக்டர்) பெரியசாமி என்பவர் தனது லத்தியால் தாக்கியதில் முருகேசன் என்பவர் மயக்கம் அடைந்து, சாலையில் விழுந்த நிலையில், அவரை தும்மல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதல் உதவி செய்து, பின்னர் ஆத்தூர் அரசு மருத்துமனையில் மேல் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

ரூ.10 லட்சம் நிதி

பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக 23-ந்தேதி (நேற்று) காலை சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுமதிக்க சென்றபோது, அவரை பரிசோதித்த டாக்டர், முருகேசன் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இந்த துயரச்செய்தியை அறிந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மிகவும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்ததோடு, இச்சம்பவத்தில் உயிரிழந்த முருகேசனின் குடும்பத்திற்கு தனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்து கொண்டார்.

மேலும், அன்னாரின் குடும்பத்தின் நிலையைக் கருத்தில்கொண்டு, அவரது குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இச்சம்பவத்திற்கு காரணமான ஏத்தாப்பூர் காவல்துறை சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பெரியசாமி என்பவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக அவர் மீது குற்றவியல் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்