கவுண்டமணி - செந்தில் காமெடி காட்சிபோல் நூதனமாக இளநீர் திருடி சிக்கிய கொள்ளையன்

கவுண்டமணி - செந்தில் காமெடி காட்சி போல் நிஜ சம்பவம்...! நூதனமாக இளநீர் திருடி சிக்கிய கொள்ளையன்

Update: 2021-10-04 09:33 GMT
சென்னை

சென்னை கே கே நகர் பகுதிகளில் சினிமா பாணியில் இளநீர் திருடி தனியாக இளநீர் கடை வைத்த நபரை கைது செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.

விஜயகாந்த் நடிப்பில் வெளியான 'கோயில் காளை' என்ற படத்தில் நகைச்சுவை நடிகர் கவுண்டமணி வைத்திருந்த இளநீர் கடையிலிருந்த இளநீரை கயிறு போட்டு திருடி செந்திலும், வடிவேலும் தனியாக இளநீர் கடை வைக்கும் காமெடி காட்சி அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும். 

அதைபோல சென்னை கே கே நகர் பகுதியில் சாலையோரமாக இருக்கும் இளநீர் கடைகளில் இருந்து இளநீர் குலைகளை திருடி விற்று வந்தவரை மடக்கிப் பிடித்த பொதுமக்கள்  போலீசில் ஒப்படைத்தனர்.

சென்னை கே கே நகர் 80 அடி சாலையில், சாலையோரமாக சுமார் 25 ஆண்டுகளாக இளநீர் கடை நடத்தி வருபவர் லிங்கம். இரவு வீட்டிற்குச் செல்லும்போது இளநீர் குலைகளை பிளாட்பாரத்திலேயே தார்பாய் போட்டு மூடி வைத்து விடுவது வழக்கம். இந்நிலையில், கடந்த சில மாதங்களாக 100, 150 இளநீர் திருடப்பட்டு வந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த லிங்கம், யார் திருடிச் செல்கிறார்கள்? என்பதை கண்டறிய அருகில் இருந்த சிசிடிவி காட்சியை பார்த்துள்ளார். அதில், டிரைசைக்கிளில் வரும் நபர் இளநீரை திருடிச் செல்வது தெரிந்துள்ளது. ஆனால், யார் திருடுகிறார்கள் என்பது தெரியவில்லை. இதையடுத்து இளநீர் திருடியதாக சாலிகிராமத்தைச் சேர்ந்த ரஜினிகாந்த். என்பவரை பிடித்து கேகே நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதைத் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், ரஜினிகாந்த் கே கே நகர் பகுதியில் இருந்த இளநீர் குலைகளை திருடி கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் அதிக விலைக்கு விற்று பணம் சம்பாதித்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து லிங்கம் அளித்துள்ள புகாரின் பேரில் ரஜினிகாந்த் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.


மேலும் செய்திகள்