வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்குவிப்பு: மத்திய அரசு அதிகாரிக்கு 4 ஆண்டு ஜெயில்

வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்குவிப்பு: மத்திய அரசு அதிகாரிக்கு 4 ஆண்டு ஜெயில் சி.பி.ஐ. கோர்ட்டு தீர்ப்பு.

Update: 2021-10-07 23:41 GMT
சென்னை,

சென்னையில் உள்ள மத்திய அரசின் குடியுரிமை அலுவலகத்தில் ஐ.ஆர்.எஸ். அதிகாரியாக பணியாற்றி வந்தவர் ஆர்.சேகர். இவர், கடந்த 1.1.2007 முதல் 20.7.2009 வரை குடியுரிமை அதிகாரியாக பணியில் இருந்த போது வருமானத்துக்கு அதிகமாக 2 கோடியே 8 லட்சத்து 42 ஆயிரம் ரூபாய்க்கு சொத்து சேர்த்துள்ளார்.

குடியுரிமை தொடர்பான பணிகளை விரைந்து முடித்து கொடுக்க டிராவல் ஏஜெண்டான அன்வர் உசைன் என்பவர் மூலம் லஞ்சப்பணத்தை பெற்றுள்ளார்.

இதைத்தொடர்ந்து அவர்கள் இருவர் மீதும் சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்தனர். இதன்பின்பு, ஐ.ஆர்.எஸ். அதிகாரி சேகர் 471 சதவீதம் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாகவும், இதற்கு அன்வர் உசைன் உடந்தையாக இருந்ததாகவும் சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இந்த வழக்கு விசாரணை சென்னையில் உள்ள சி.பி.ஐ. கோர்ட்டில் நடந்தது. வழக்கை விசாரித்த கோர்ட்டு, குற்றம்சாட்டப்பட்ட இருவருக்கும் 4 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.6 லட்சத்து 10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறியது.

மேலும் செய்திகள்