தமிழக மீனவர்கள் 29 பேர் கைது: மத்திய அரசு இலங்கை அரசுடன் பேசி மீனவர்களை மீட்க வேண்டும் - ஜி.கே.வாசன்

மத்திய, மாநில அரசுகள், தமிழக மீனவர்களின் மீன்பிடித் தொழிலைப் பாதுகாக்கும் விதமாக தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

Update: 2024-03-10 11:43 GMT

கோப்புப்படம் 

சென்னை,

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:-

தமிழக மீனவர்கள் 29 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்து சென்றதும், அவர்களின் 5 விசைப்படகுகளை பறிமுதல் செய்ததும் மிகவும் கண்டிக்கத்தக்கது. ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 22 மீனவர்களும், ஜெகதாப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த 7 மீனவர்களும் நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த போது அப்பகுதிக்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை கைது செய்து சென்றிருக்கின்றனர். மேலும் மீனவர்களின் 5 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர். இது இலங்கை கடற்படையினரின் அத்துமீறிய நடவடிக்கையாகும்.

கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களின் குடும்பத்தினர் மிகுந்த கவலை அடைந்துள்ளனர். இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தமிழக மீனவர்களை கைது செய்வதும், சிறைப்பிடித்துச் செல்வதும், மேலும் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவதும், மீன்பிடிச்சாதனங்களை சேதப்படுத்துவதும், பறிமுதல் செய்வதும் நீடிக்கிறது. இனியும் இது போன்ற இலங்கை கடற்படையினரின் நடவடிக்கைகள் தொடரக்கூடாது.

எனவே மத்திய அரசு, உடனடியாக இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி இன்று கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 29 பேரை விடுவிக்கவும், பறிமுதல் செய்த 5 விசைப்படகுகளை ஒப்படைக்கவும் வலியுறுத்த வேண்டும். மேலும் மத்திய, மாநில அரசுகள், தமிழக மீனவர்களின் மீன்பிடித் தொழிலைப் பாதுகாக்கும் விதமாக தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு, மீனவக்குடும்பங்களின் நிம்மதியான வாழ்க்கைக்கு உதவிக்கரமாக இருக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்