சேலம் மாநகரில் போலீசார் தீவிர வாகன சோதனை: ஹெல்மெட் அணியாமல் சென்ற 2,992 பேர் மீது வழக்கு

சேலம் மாநகரில் போலீசாரின் தீவிர வாகன சோதனையில் ஹெல்மெட் அணியாமல் சென்ற 2 ஆயிரத்து 992 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-08-01 20:37 GMT

சேலம், 

ஹெல்மெட் கட்டாயம்

இருசக்கர வாகன ஓட்டிகள் அனைவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும் என்று ஏற்கனவே அரசு அறிவித்துள்ளது. ஆனால் பல வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணியாமல் சென்று வருகின்றனர். இந்த நிலையில் சேலம் மாநகரில் நேற்று முதல் ஹெல்மெட் அணியாமல் செல்லும் வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு செய்வதுடன் அபராதம் விதிக்க போலீசாருக்கு கமிஷனர் நஜ்முல் ஹோடா உத்தரவிட்டுள்ளார்.

அதைத்தொடர்ந்து மாநகரில் நேற்று காலை முதல் சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே, 4 ரோடு, புதிய பஸ்நிலையம், அஸ்தம்பட்டி ரவுண்டானா உள்பட பல்வேறு இடங்களில் போலீசார் மற்றும் போக்குவரத்து போலீசார் இணைந்து தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஹெல்மெட் அணியாமல் வந்த வாகன ஓட்டிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அபராதம் விதித்தனர்.

2,992 பேர் மீது வழக்கு

போலீசார் சோதனை நடத்துவதை பார்த்ததும் சில வாகன ஓட்டிகள் தூரத்திலேேய வாகனத்தை திருப்பிக் கொண்டு வேறு பாதை வழியாக சென்றதை பார்க்க முடிந்தது. மாநகர எல்லையில் உள்ள அரியானூர், மாசிநாயக்கன்பட்டி, கருப்பூர், சீலநாயக்கன்பட்டி, அயோத்தியாப்பட்டணம், ஆச்சாங்குட்டப்பட்டி ஆகிய சோதனைச்சாவடிகளில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு ஹெல்மெட் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்தனர்.

மாநகரில் நேற்று மட்டும் ஹெல்மெட் அணியாமல் சென்ற 2 ஆயிரத்து 992 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அபராதம் விதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்