கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என தொழிலாளர் உதவி ஆணையர் மைவிழி செல்வி கூறினார்.

Update: 2023-10-13 19:37 GMT

தமிழ்நாடு தொழிலாளர் நலநிதி சட்டத்தின் படி தொழிற்சாலைகள், கடைகள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், தோட்ட நிறுவனங்கள் போன்ற அமைப்பு சார்ந்த நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் ஒவ்வொரு ஆண்டும் தொழிலாளர் மற்றும் நிறுவனத்தின் பங்காக ஒவ்வொரு தொழிலாளிக்கும் ரூ.50 என கணக்கிட்டு நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப தொழிலாளர் நலநிதி தொகையினை வாரியத்திற்கு செலுத்த வேண்டும்.

அதன்படி நடப்பு 2023-ம் ஆண்டிற்கான தொழிலாளர் நலநிதியினை 3.11.2024-க்குள் செலுத்த வேண்டும். அவ்வாறு தொழிலாளர் நலநிதி செலுத்தும் தொழிலாளர்கள் மற்றும் அவரை சார்ந்தவர்களுக்கு வாரியத்தின் மூலம் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.அதில் பட்ட மேற்படிப்பு வரை பயிலும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு ரூ. 1,000 முதல் ரூ. 12,000 வரை கல்வி உதவித்தொகை, பாடநூல் வாங்க உதவி தொகை, எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை ஆகிய திட்டங்களுக்கு தொழிலாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

விண்ணப்பங்களை நல வாரிய அலுவலகத்தில் நேரிலோ அல்லது இணையதளம் மூலமாகவோ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை செயலாளர், தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம், சென்னை-6 என்ற முகவரிக்கு 31.12.2023 அனுப்பி வைக்க வேண்டும். மேற்கண்ட தகவலை தொழிலாளர் உதவி ஆணையர் மைவிழி செல்வி தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்