காங்கிரஸ் தலைவர் மர்ம மரணம்: ஜெயக்குமார் வீட்டின் அருகே உள்ள கிணற்றில் கத்தி மீட்பு

ஜெயக்குமார் தனசிங் இறந்து 7 நாட்களாகியும் அவரது சாவில் உள்ள மர்மம் விலகாமல் உள்ளது.

Update: 2024-05-10 07:55 GMT

நெல்லை,

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே கரைச்சுத்து புதூரைச் சேர்ந்தவர் கே.பி.கே.ஜெயக்குமார் தனசிங் (வயது 60). நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரான இவர், காண்டிராக்டர் தொழிலும் செய்து வந்தார்.

இவர் கடந்த 4-ந்தேதி காலையில் தனது வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் உடல் கருகிய நிலையில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் மேற்பார்வையில், 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

அவர் இறந்து கிடந்த தோட்டத்தில் வேறு ஏதேனும் தடயங்கள் உள்ளதா? என்பதை கண்டறிவதற்காக 5-வது நாளாக இன்றும் தடயவியல் நிபுணர்கள் அங்குலம் அங்குலமாக சோதனை நடத்தி வருகின்றனர். தோட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் சென்று, அங்கு உள்ள பொருட்களை சேகரித்து ஆய்வு செய்து வருகின்றனர்.

ஜெயக்குமார் தனசிங் இறந்து கிடந்த தோட்டத்தில் உள்ள கிணற்றில் இருந்து 4 ராட்சத மோட்டார்கள் மூலம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அந்த கிணற்றில் இருந்து கத்தி ஒன்று மீட்கப்பட்டுள்ளது. அந்த கத்தியை தடயவியல் நிபுணர்கள் சோதனை செய்து வருகின்றனர். தொடர்ந்து அந்த கிணற்றில் தூர்வாறும் ஊழியர்கள், தீயணைப்பு படையினர் தடயங்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

வழக்கின் முக்கிய தடயங்கள் கிணற்றில் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 17 மணிநேரமாக கிணற்றில் இருந்து மோட்டார் மூலம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்