தனியார் பள்ளி அருகே என்ஜினீயர் மர்ம சாவு

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி அருகே என்ஜினீயர் மர்ம சாவு சாவில் சந்தேகம் இருப்பதாக தந்தை போலீசில் புகார்

Update: 2022-12-27 18:45 GMT

கள்ளக்குறிச்சி

உளுந்தூர்பேட்டை தாலுகா ஆரியநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் பச்சமுத்து மகன் பிரபு(வயது 24). என்ஜினீயரான இவரும், அவரது நண்பர் உதயகுமார் என்பவரும் அதே பகுதியை சேர்ந்த மற்றொரு நண்பர் ராம்குமாரின் மோட்டார் சைக்கிளை இரவல் வாங்கிக்கொண்டு வெளியே சென்றதாக கூறப்படுகிறது. ஆனால் நீண்ட நேரமாகியும் பிரபு திரும்பி வராததால் சந்தேகம் அடைந்த அவரது தந்தை செல்போன் மூலம் பிரபுவை தொடர்பு கொண்டபோது தொடர்பு கொள்ள முடியவில்லை. இந்த நிலையில் நள்ளிரவு ஒரு மணியளவில் கள்ளக்குறிச்சி புறவழிச்சாலையில் உள்ள தனியார் பள்ளி அருகே சாலை ஓரத்தில் பிரபு மர்மமான முறையில் இறந்து கிடந்ததை அறிந்த பச்சமுத்து உறவினர்களுடன் அங்கு விரைந்து சென்று பார்த்தார். அப்போது உடலில் காயங்களுடன் இறந்து கிடந்த பிரபுவை பார்த்து அவர் கதறி அழுதார். இது குறித்து தகவல் அறிந்து வந்த கள்ளக்குறிச்சி போலீசார் பிரபுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவா் அடையாளம் தெரியாத வாகனம்மோதி இறந்ததாக கூறப்படுகிறது. ஆனால் தனது மகனின் சாவில் சந்தேகம் உள்ளதாக பச்சமுத்து கள்ளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து வாகனம் மோதி பிரபு இறந்தாரா? அல்லது வேறு யாரேனும் அவரை கொலை செய்து உடலை சாலையோரத்தில் வீசி சென்றார்களா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தனியார் பள்ளி அருகே என்ஜினீயர் மர்மான முறையில் இறந்து கிடந்த சம்பவம் கள்ளக்குறிச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்