சென்னை விமான நிலையத்தில் ரூ.37 லட்சம் வெளிநாட்டு பணம் பறிமுதல்

சென்னையில் இருந்து துபாய்க்கு கடத்த முயன்ற ரூ.37 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Update: 2022-09-22 09:26 GMT

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து துபாய்க்கு விமானம் சென்றது. முன்னதாக அதில் செல்ல வந்த பயணிகளை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர்.

அப்போது சென்னையை சேர்ந்த சையத் இப்ராஹிம் (வயது 30), அக்பர் (26) ஆகிய 2 பேரை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி விசாரித்தனர். 2 பேரும் சுற்றுலா பயணிகள் விசாவில் துபாய் செல்ல வந்து இருந்தனர். அவர்களது உடைமைகளை சோதனை செய்தனர். அதில் அவர்களது கைப்பை மற்றும் உள்ளாடைக்குள் அமெரிக்க டாலர், யூரோ கரன்சி ஆகியவற்றை மறைத்து வைத்து கடத்த முயன்றதை கண்டுபிடித்தனர்.

இதையடுத்து 2 பேரிடம் இருந்து ரூ.37 லட்சத்து 39 ஆயிரம் மதிப்புள்ள வெளிநாட்டு பணத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் 2 பேரின் விமான பயணத்தையும் ரத்து செய்தனர். மேலும் 2 பேரையும் கைது செய்த சுங்க இலாகா அதிகாரிகள், அவர்களிடம் வெளிநாட்டு பணத்தை கொடுத்து துபாய்க்கு அனுப்பி வைக்க முயன்றது யார்? என விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்