அட்சய திருதியையொட்டி தங்கம் விலை உயர்வு

அட்சய திருதியை முன்னிட்டு இன்று சென்னையில் தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது.

Update: 2024-05-10 01:29 GMT

கோப்புப்படம் 

சென்னை,

சித்திரை மாதத்தில் அமாவாசைக்கு பிறகு வரும் வளர்பிறை திருதியை, அட்சய திருதியை என்று போற்றப்படுகிறது. அட்சயம் என்றால் அள்ள அள்ள குறையாத அல்லது தேயாத என்று பொருள். அனைத்து நலன்களையும் அள்ளித் தரும் நாளாக, அட்சய திருதியை இருப்பதாக புராணங்கள் சொல்கின்றன. இந்துக்களும் ஜைனர்களும் இந்த நாளை மிக புனிதமான நாளாக கொண்டாடுகின்றனர்.

இந்த ஆண்டு அட்சய திருதியை திதி இன்று (மே 10) காலை 4.17 மணிக்கு தொடங்கி நாளை (மே 11) மதியம் 2:50 மணிக்கு முடிவடைகிறது. இந்த நாளில் வாங்கப்படும் எந்த பொருளும் இல்லத்தில் குறைவின்றி நிறைந்திருக்கும் என்பது நம்பிக்கை. எனவேதான் இந்த நாளில் மதிப்புமிக்க தங்கத்தை வாங்குவதற்கு விரும்புகின்றனர்.

இந்த நிலையில் அட்சய திருதியை முன்னிட்டு இன்று சென்னையில் தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது. ஏற்கெனவே தங்கம் விலை கடந்த மாதத்தில் கிடுகிடுவென அதிகரித்து ஒரு சவரன் ரூ.55 ஆயிரத்தை கடந்தது. நடுத்தர மற்றும் ஏழை, எளிய மக்களுக்கு எட்டாக் கனியாகிவிடும் என்று நினைக்கத் தோன்றும் அளவுக்கு தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்தது. நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்த நிலையில், இன்று சற்று உயர்ந்துள்ளது.

அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு இன்று ரூ.360 உயர்ந்து ரூ.53,280-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.45 உயர்ந்து ரூ.6,660-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1.30 உயர்ந்து ரூ.90-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்