"ஆற்றல் மிகுந்த மக்கள் முதல்வருக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்" - ஏ.ஆர்.ரஹ்மான் ட்வீட்

ஏ.ஆர்.ரஹ்மான் மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது மனைவி துர்கா ஸ்டாலினுடன் கலந்து கொண்டார்.

Update: 2022-06-11 16:15 GMT

சென்னை,


இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் மூத்த மகள் கதீஜாவுக்கும், ரியாஸ்தீன் ஷேக்கிற்கும் கடந்த மாதம் 5 ஆம் தேதி சென்னையில் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது. இந்த திருமண நிகழ்ச்சியில் நெருங்கிய குடும்ப உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்ட நிலையில், திருமண வரவேற்பு நிகழ்ச்சியை அனைவரையும் அழைத்து நடத்துவதாக ஏ.ஆர்.ரஹ்மான் அறிவித்திருந்தார்.

இதையடுத்து நேற்று செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஏ.ஆர்.ஆர். பிலிம் சிட்டியில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது மனைவி துர்கா ஸ்டாலினுடன் கலந்துகொண்டார்.

இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், "ஏ.ஆர்.ரஹ்மானின் மகள், கதீஜா-ரியாஸ்தீனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, புதுமணத் தம்பதிகளுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்தேன்.

எல்லைகள் மற்றும் தடைகளைத் தாண்டி, தனது ஆத்மார்த்தமான இசையால் மேலும் பல இதயங்களைக் ஒன்றிணைக்க அன்பான ஏ.ஆர்.ரஹ்மானை வாழ்த்துகிறேன்" என்று தெரிவித்திருந்தார்.


இந்நிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து ஏ.ஆர்.ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது;-

"தங்கள் துணைவியாருடனும், மருமகளுடனும் வருகை புரிந்து அன்பு மணமக்களை வாழ்த்தி எங்கள் இல்லத் திருமண விழாவைச் சிறப்பித்தமைக்கு ஆற்றல் மிக்க தமிழ்நாட்டின் மக்கள் முதல்வர் அவர்களுக்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகள்!"

இவ்வாறு ஏ.ஆர்.ரஹ்மான் பதிவிட்டுள்ளார். 



Tags:    

மேலும் செய்திகள்