குமரி: துறைமுகப்பகுதியில் படகு கவிழ்ந்த விபத்தில் மீனவர் உயிரிழப்பு..! பொதுமக்கள் போராட்டம்

அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதால், துறைமுகத்தை சீரமைக்கக்கோரி அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Update: 2022-08-11 12:40 GMT

கன்னியாகுமரி,

குமரி மாவட்டம் கருங்கல் அருகே தேங்காப் பட்டணம் துறைமுகம் உள்ளது. இங்கிருந்து சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பைபர் விசைப்படகுகள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்கின்றன.

இந்த துறைமுக நுழைவு வாயிலில் மணல் திட்டு அடிக்கடி ஏற்படுவதால், படகுகள் விபத்தில் சிக்கி வருகின்றன. கடந்த 2 நாட்களுக்கு முன்பு மணல் திட்டில் தட்டி, துறைமுக தடுப்பு சுவரில் மோதியதில் ஒரு பைபர் படகு சேதமடைந்தது. நேற்றும் ஒரு பைபர் படகு இதுபோல் விபத்தில் சிக்கி கடலில் கவிழ்ந்தது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை. அடிக்கடி விபத்தை ஏற்படுத்தும் மணல் திட்டை அகற்ற வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று அதிகாலை ஒரு பைபர் படகு இதுபோல விபத்தில் சிக்கியதில் மீனவர் ஒருவர் பலியாகி உள்ளார். பூத்துறை பகுதியைச் சேர்ந்தவர் சைமன் (வயது 48), மீனவர். இவர் இன்று அதிகாலை ஒரு பைபர் படகில் 4 பேருடன் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றார். மீன் பிடித்து விட்டு காலை 7.30 மணியளவில் அவர்கள் கரை திரும்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது காற்றின் வேகமும் அலையின் சீற்றமும் அதிகமாக இருந்தது. அந்த நேரத்தில் சைமன் வந்த பைபர் படகு எதிர்பாராதவிதமாக மணல் திட்டில் தட்டியதோடு துறைமுக தடுப்புச் சுவரிலும் மோதி யது. இதனால் நிலை தடுமாறிய படகு கடலில் கவிழ்ந்தது.

இந்த சம்பவத்தில் கடலில் தவறி விழுந்த சைமன், வலைக்குள் சிக்கிக் கொண்டார். இதனால் நீரில் மூழ்கிய அவர் பரிதாபமாக இறந்தார். அவரது உடலை சக மீனவர்கள் மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பலியான சைமனுக்கு, சொர்ணம் என்ற மனைவியும், 2 மகள்கள் மற்றும் ஒரு மகனும் உள்ளனர்.

 துறைமுகத்தை முறையாக கட்டாததாலேயே துறைமுகப்பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதாகவும், துறைமுகத்தை உடனடியாக சீரமைத்துத்தர வேண்டும் எனக்கோரியும் அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்