ராமநாதபுரம் மாவட்டத்தில் இமானுவேல் சேகரனுக்கு உருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம்; முதல்-அமைச்சர் அறிவிப்பு

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில், தியாகி இமானுவேல் சேகரனுக்கு ரூ.3 கோடி மதிப்பீட்டில் உருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்படும் என முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

Update: 2023-09-11 03:40 GMT

சென்னை,

தியாகி இமானுவேல் சேகரன் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதற்காக, ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள தியாகி இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அரசியல் தலைவர்கள், சமுதாய தலைவர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகின்றனர்.

இதனிடையே, இமானுவேல் சேகரன் நினைவு தினத்தையொட்டி ராமநாதபுரம், மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில், தியாகி இமானுவேல் சேகரனுக்கு உருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்படும் என முதல்-அமைச்சர்  மு.க. ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

ரூ.3 கோடி மதிப்பீட்டில் தமிழக அரசு சார்பில் இந்த மணிமண்டபம் கட்டப்படும். அவர், கடந்த 1942-ம் ஆண்டு வெள்ளையர்களை எதிர்த்து வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் கலந்து கொண்டவர். ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பாடுபட்டவர் என்றும் அதுபற்றிய தமிழக அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்