தேனி அருகே வாகனம் மோதி மூதாட்டி பலி; உறவினர்கள் சாலை மறியல்

தேனி அருகே வாகனம் மோதி மூதாட்டி பலியானார். வாகன டிரைவரை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2023-10-24 21:30 GMT

தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை வடக்கு பூந்தோட்ட தெருவை சேர்ந்த மோசஸ் மனைவி ஏசம்மாள் (வயது 63). இவர், கடந்த 22-ந்தேதி தேனியை அடுத்த ஆர்.எம்.டி.சி. நகரில் உள்ள தனது மகள் வீட்டுக்கு செல்வதற்காக பெரியகுளத்தில் இருந்து பஸ்சில் வந்தார். ஆர்.எம்.டி.சி. நகரில் சாலையை கடக்க முயன்ற போது அந்த வழியாக தேனி நோக்கி சென்ற அடையாளம் தெரியாத ஒரு வாகனம் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இதற்கிடையே விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற அடையாளம் தெரியாத வாகனத்தின் டிரைவரை கைது செய்யக்கோரி ஏசம்மாளின் உறவினர்கள் ஆர்.எம்.டி.சி. காலனியில் தேனி-போடி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து போலீசார் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையை தொடர்ந்து மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த விபத்து குறித்து அவருடைய மகன் சத்தியராஜ் கொடுத்த புகாரின் பேரில் பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்