பள்ளி வாகனங்களில் கேமரா பொருத்த உத்தரவு

சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள பள்ளி வாகனங்களில் உள்ள பாதுகாப்பு அம்சங்கள் குறித்து மீனம்பாக்கம் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் கூட்டு குழு ஆய்வு நடந்தது.

Update: 2023-05-29 06:16 GMT

இதில் மீனம்பாக்கம் வட்டார போக்குவரத்து அலுவலர் ஜி.சுந்தரமூர்த்தி தலைமையில் தாம்பரம் கோட்டாச்சியர் செல்வகுமார், செங்கல்பட்டு மாவட்ட பள்ளி கல்வி அலுவலர் தனலட்சுமி, போக்குவரத்து போலீஸ் உதவி கமிஷனர் திருவேங்கடம் ஆகியோர் சோதனை செய்தனர்.

இந்த ஆய்வில் 40 பள்ளி வாகனங்கள் சோதனை செய்யப்பட்டன. பள்ளி வாகனங்களில் முன்னும், பின்னும் நிற்பவர்கள் யார்? என்பதை அறிந்து கொள்வதற்காக முதல்முறையாக கேமரா பொருத்தவும் அறிவுறுத்தப்பட்டது. அதன்படி பஸ்களில் கேமரா வைக்கப்பட்டு இருக்கிறதா? என சோதனை செய்யப்பட்டது.

வாகன தகுதி சான்றிதழ், டிரைவரின் தகுதி சான்றிதழ் போன்றவை சரிபார்க்கப்பட்டு, இதில் முறையான பாதுகாப்பு வசதி மற்றும் தகுதி சான்றிதழ் இல்லாத 4 வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டது. இந்த ஆய்வின்போது போக்குவரத்து மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சியாம், சுந்தர், ராஜேந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

அதேபோல் பூந்தமல்லி வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் ஆவடியில் திருவள்ளூர் வருவாய் கோட்டாட்சியர் ஜெயராஜ் பவுலின், பூந்தமல்லி வட்டார போக்குவரத்து அலுவலர் ஸ்ரீதரன் ஆகியோர் ஆவடி சுற்று வட்டார பகுதியில் உள்ள 300-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி வாகனங்களை ஆய்வு செய்தனர். இதில் ஆவடி வட்டார போக்குவரத்து ஆய்வாளர்கள் காவேரி மற்றும் சுரேஷ்குமார், ஆவடி தாசில்தார் வெங்கடேசன் உள்பட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்