பொதுவினியோக திட்ட குறைதீர்வு முகாம்

கடலூர் மாவட்டத்தில் உள்ள தாலுகா அலுவலகங்களில் பொதுவினியோக திட்ட குறைதீர்வு முகாம் நாளை மறுநாள்(சனிக்கிழமை) நடைபெற உள்ளதாக கலெக்டர் பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

Update: 2022-09-08 16:37 GMT

கடலூர்;

கடலூர் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கடலூர் மாவட்டத்தில் உள்ள 10 தாலுகாக்களுக்குட்பட்ட கிராமங்களில் நாளை மறுநாள்(சனிக்கிழமை) பொது வினியோகத்திட்ட குறைதீர் முகாம் நடைபெற உள்ளது. அதாவது கடலூர் தாலுகா அலுவலகம், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, காட்டுமன்னார்கோவில், புவனகிரி, விருத்தாசலம், திட்டக்குடி, வேப்பூர், ஸ்ரீமுஷ்ணம் ஆகிய வட்ட வழங்கல் அலுவலகங்கள், சிதம்பரம் குடிமை பொருள் தனி தாசில்தார் அலுவலகம் உள்ளிட்ட அலுவலகங்களில் நடக்கிறது.

ஆகவே மேற்கண்ட தாலுகாவுக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் தங்கள் குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை மற்றும் நகல் குடும்ப அட்டை, செல்போன் எண் பதிவு மற்றும் மாற்றம் செய்வதற்கான கோரிக்கைகள் குறித்த மனுக்களை அளிக்கலாம். பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்படும்.

மனு அளிக்கலாம்

மேலும் 65 வயதுக்கு மேற்பட்ட ஆதரவற்ற முதியோர்களும், 60 சதவீத ஊனத்தால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளும் ரேஷன் கடைகளுக்கு சென்று பொது வினியோக திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அத்தியாவசிய பொருட்களை பெறுவதற்குரிய அங்கீகாரச் சான்று கோரி மனு அளிக்கலாம்.

கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், அதற்குரிய ஆவணங்களை சமர்ப்பித்து புதிய குடும்ப அட்டைகள் பெறுவதற்குரிய மனுக்களை அளித்து பயன்பெறலாம். மேலும் மூன்றாம் பாலினத்தவர், பழங்குடியினர் மற்றும் நரிக்குறவர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் ஏதும் விடுபட்டு இருப்பின் அவர்களும் புதிய குடும்ப அட்டைபெறுவதற்கு மனுக்கள் அளிக்கலாம். இந்த கூட்டத்தில் பொது வினியோக திட்டத்தின் கீழ் செயல்படும் ரேஷன்கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் தரம் குறித்த புகார்களையும் அளிக்கலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்