பண்ருட்டி அருகேவிவசாயி வீட்டில் ரூ.3½ லட்சம் நகை, பணம் கொள்ளைமர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பண்ருட்டி அருகே விவசாயி வீட்டில் ரூ.3½ லட்சம் மதிப்புள்ள நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2023-07-19 18:45 GMT

பண்ருட்டி, 

விவசாயி வீடு

பண்ருட்டி அடுத்த தட்டாம்பாளையம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜசேகர் (வயது 45), விவசாயி. இவர் நேற்று காலை 11 மணியளவில் வீட்டை பூட்டிவிட்டு, தனது மனைவி சுசீலாவுடன் வயலுக்கு சென்றார். பின்னர் அவர்கள் 2 பேரும் விவசாய பணிகளை செய்து முடித்து விட்டு மதியம் 2 மணியளவில் வீட்டுக்கு திரும்பினர். அப்போது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த கணவன்-மனைவி இருவரும் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் வைக்கப்பட்டிருந்த 7 பவுன் நகைகள், ரூ.80 ஆயிரம் ரொக்கத்தை காணவில்லை. இதனால் பதறிய ராஜசேகர் இதுபற்றி பண்ருட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

போலீசார் விசாரணை

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டதுடன், அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், கணவன்-மனைவி இருவரும் வீட்டை பூட்டி விட்டு வயலுக்கு சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள் பட்டப்பகலில் வீட்டின் கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்து, பீரோவில் இருந்த ரூ.3½ லட்சம் மதிப்புள்ள நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்றிருப்பது தெரியவந்தது.

இதற்கிடையே போலீசார் கொள்ளை நடந்த வீட்டில் பதிவான மர்மநபர்களின் கைரேகைகள் மற்றும் தடயங்களை சேகரித்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். பட்டப்பகலில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்