வாந்திக்கு ஊசி போட்ட மாணவன் 'திடீர்' சாவு

அஞ்சுகிராமம் அருகே வாந்திக்கு ஊசி போட்ட பள்ளி மாணவர் திடீரென இறந்தார். இதையடுத்து பிணத்துடன் தனியார் கிளினிக்கை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.

Update: 2023-09-22 18:45 GMT

அஞ்சுகிராமம், 

அஞ்சுகிராமம் அருகே வாந்திக்கு ஊசி போட்ட பள்ளி மாணவர் திடீரென இறந்தார். இதையடுத்து பிணத்துடன் தனியார் கிளினிக்கை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.

10-ம் வகுப்பு மாணவன்

அஞ்சுகிராமம் அருகே உள்ள மருங்கூரை அடுத்த குமாரபுரம் தோப்பூரை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 50), கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி ராஜேஸ்வரி. இவர்களுக்கு அனீஷ் (15) உள்பட 2 மகன்களும், ஒரு மகளும் இருந்தனர். இவர்கள் அனைவரும் கடந்த ஒரு ஆண்டாக ராஜாவூரில் வாடகைக்கு வீட்டில் வசித்து வருகின்றனர். சிறுவன் அனீஷ் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்தநிலையில் அனீஷ் நேற்று காலை 9 மணியளவில் பள்ளிக்கு செல்ல தயாராகி கொண்டிருந்தார். அப்போது, திடீரென வாந்தி எடுத்த நிலையில் உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த தாயார் ராஜேஸ்வரி, மகனை மருங்கூரில் உள்ள ஒரு தனியார் கிளினிக்குக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றார். அங்கு டாக்டர் இல்லாத நிலையில் நர்சு மட்டுமே இருந்தார்.

ஊசி போட்டார்

அவர் அனீசுக்கு ஊசி போட்டு சிகிச்சை அளித்தார். பின்னர் தாயார் ராஜேஷ்வரி மகனை வீட்டு அழைத்து சென்று ஓய்வெடுக்க வைத்துவிட்டு வங்கி புத்தகத்தில் ஆதார் கார்டு இணைப்பதற்காக மருங்கூரில் உள்ள வங்கிக்கு சென்றார். சிறிது நேரம் கடந்து ராஜேஸ்வரி வீடு திரும்பினார். அப்போது, வீட்டில் இருந்த அனீஷ் தாய் வந்த சிறுது நேரத்தில் மயங்கி விழுந்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜேஸ்வரி, அனீசை மீண்டும் மருங்கூரில் உள்ள வேறொரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக கூறினார். இதே கேட்டு ராஜேஸ்வரி கதறி அழுதார்.

உறவினர்கள் ேபாராட்டம்

இதற்கிடைேய தகவல் அறிந்த உறவினர்கள், பொதுமக்கள் அங்கு திரண்டனர். அவர்கள் மாணவனின் உடலை முதலில் சிகிச்சை அளித்த கிளினிக்கிற்கு கொண்டு சென்றனர். அங்கு தவறான சிகிச்சையால் மாணவன் இறந்ததாக கூறி கிளினிக்கை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இதுகுறித்து தகவல் அறிந்து அஞ்சுகிராமம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் கதிரேசன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

பின்னர் போலீசார் உடலை கைப்பற்றி பிேரத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தவறான சிகிச்சையால் மாணவன் இறந்தாரா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறார்கள். பிரேத பரிசோதனை முடிவு வந்த பின்புதான் சாவுக்கான காரணம் தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர்.

வாந்திக்கு ஊசி போட்ட மாணவன் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

---

(படம் உண்டு)

Tags:    

மேலும் செய்திகள்