பேரம்பாக்கம் பஸ் நிலையத்தில் காதல் விவகாரத்தில் வாலிபருக்கு கத்திக்குத்து

பேரம்பாக்கம் பஸ் நிலையத்தில் காதல் விவகாரத்தில் வாலிபரை கத்தியால் கையில் குத்தி விட்டு கொலை செய்து விடுவதாக மிரட்டல் வைத்து தப்பிச் சென்றனர்.

Update: 2023-09-26 15:29 GMT

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் கொட்டையூர் இந்திரா நகரை சேர்ந்தவர் பவுத்தீஸ்வரன் (வயது 23). இவர் கீழச்சேரியை சேர்ந்த 19 வயது பெண்ணை கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இவர்களது காதல் விவகாரம் பெண் வீட்டாருக்கு தெரியவரவே எதிர்ப்பு தெரிவித்து கண்டித்தனர்.

இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் பெண்ணின் சகோதரர் அரவிந்த குமார் பவுத்தீஸ்வரனை தொடர்பு கொண்டு இது சம்பந்தமாக பேசலாம் என கூறி பேரம்பாக்கம் பஸ் நிலையத்திற்கு வர வைத்தார்.

அதை தொடர்ந்து பவுத்தீஸ்வரன் வந்தவுடன் அங்கிருந்த அரவிந்தகுமார் தனது நண்பர்களான டேவிட் மற்றும் தமிழ்செல்வன் ஆகியோருடன் சேர்ந்து தகாத வார்த்தையால் பேசி அவரை தாக்கி உள்ளனர். பின்னர் அரவிந்தகுமார் தான் வைத்திருந்த கத்தியால் பவுத்தீஸ்வரன் கையில் குத்தி விட்டு கொலை செய்து விடுவதாக மிரட்டல் வைத்து தப்பிச் சென்றனர்.

இதில் காயமடைந்த பவுத்தீஸ்வரன் திருவள்ளூர் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து மப்பேடு போலீசார் அரவிந்தகுமார், டேவிட், தமிழ்ச்செல்வன் ஆகிய 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்