திமுக அரசு சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் முழுத்தோல்வி அடைந்திருக்கிறது - எடப்பாடி பழனிசாமி

கவர்னர் மாளிகை தொடங்கி ஆலயங்கள் வரை எங்கு பார்த்தாலும் வெடிகுண்டு கலாச்சாரம் பரவி வருவதை கண்டு மக்கள் அச்சத்துடன் இருக்கின்றனர் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

Update: 2023-11-10 13:31 GMT

சென்னை,

அதிமுக பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்து இருப்பதாவது:-

சென்னை பாரிமுனை, ஶ்ரீ வீரபத்ரசாமி திருக்கோவில் உட்பிரகாரத்துக்கு உள்ளேயே, பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது. இந்த கொடுஞ்செயலை வன்மையாக கண்டிப்பதுடன், இந்த குற்றச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்துகிறேன்.

நான் ஏற்கனவே பலமுறை எச்சரித்தும் இந்த திமுக அரசு சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் மீண்டும் மீண்டும் முழுத்தோல்வி அடைந்திருப்பதன் எடுத்துக்காட்டே இந்த சம்பவம். முன் எப்போதும் இல்லாத வகையில் தமிழ்நாட்டில், கவர்னர் மாளிகை தொடங்கி ஆலயங்கள் வரை எங்கு பார்த்தாலும் வெடிகுண்டு கலாச்சாரம் பரவி வருவதை கண்டு மக்கள் அச்சத்துடனும் இந்த ஆட்சியாளர்கள் மீது கடுங்கோபத்துடனும் இருந்து வருகின்றனர்.

எதிலும் அக்கறையின்றி செயல்படும் இந்த திமுக அரசின் பொம்மை முதல்வர் வெறும் வாய்ச்சவடால் இன்றி இனியேனும் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.


Tags:    

மேலும் செய்திகள்