மதுரையில் இருந்து துபாய் விமானம் 7 மணி நேரம் தாமதமாக புறப்பட்டது

மதுரையில் இருந்து துபாய் விமானம் 7 மணி நேரம் தாமதமாக புறப்பட்டது

Update: 2022-06-11 20:37 GMT

மதுரை

மதுரையில் இருந்து துபாய்க்கு விமான சேவை நடந்து வருகிறது. இந்தநிலையில், நேற்று மதியம் 12 மணிக்கு மதுரையில் இருந்து துபாய் செல்வதற்கு தனியார் விமானம் தயாராக இருந்தது. அதில் பயணம் செய்ய 151 பயணிகள் முன்பதிவு செய்து, விமான நிலைய வளாகத்தில் காத்திருந்தனர். பின்னர் அவர்கள் பல்வேறு கட்ட பரிசோதனைகளுக்கு பின்னர் விமானத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். பயணிகள் அனைவரும் விமானத்தில் ஏறி அமர்ந்த பின்னர், விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு இருப்பது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் கீழே இறக்கப்பட்டு, விமான நிலைய ஓடு தளபகுதியில் காத்திருந்தனர். நீண்ட நேரமாகியும் விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்படாததால் பயணிகள் விமான நிலைய பணியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் அவர்கள் அனைவரும் மீண்டும் விமான நிலைய உள்வளாகத்திற்குள் அழைத்து வரப்பட்டனர். விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறை சரி செய்ய சென்னையில் இருந்து பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு, சரி செய்யும் பணிகள் நடந்தது. மாலை 6 மணி வரை அந்த விமானம் துபாய் செல்லாமல் மதுரையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. நீண்ட நேர தாமதத்தால் பயணிகள் அவதி அடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்