ரேஷன் கடைகளில் கூடுதலாக என்னென்ன பொருட்கள் தேவை?
ரேஷன் கடைகளில் கூடுதலாக என்னென்ன பொருட்கள் தேவை? என்பது குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.;
ரேஷன் கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் மானிய விலையில் கிடைப்பதால், சாதாரண மக்கள் முதல் நடுத்தர வர்க்கத்தினரும் அங்கு உணவு பொருட்களை வாங்கிப் பயன்படுத்துகிறார்கள்.
கோடை வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் பகல் நேரங்களில் ரேஷன் கடைகளுக்கு பொதுமக்கள் வருகை குறைவாக காணப்படுகிறது. காலையில் 8.30 மணியில் இருந்து பகல் 12.30 மணி வரையிலும், மாலையில் 3 மணியிலிருந்து இரவு 7 மணி வரையிலும் கடை திறந்திருக்கிறது. இருந்தாலும் பொதுமக்கள் பகல் பொழுதில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் காலையில் 9 மணிக்கு உள்ளாகவும், மாலை 4 மணிக்கு மேலும்தான் ரேஷன் கடைகளுக்கு செல்கின்றனர். இதனால் பகல் நேரங்களில் பெரும்பாலான ரேஷன் கடைகள் வெறிச்சோடியே காணப்படுகின்றன. மாலையில் பரபரப்பாக மாறி விடுகின்றன.
ரேஷன் கடைகளில் வழக்கமாக வழங்கிவரும் பொருட்களுடன் கூடுதலாகவும் சில உணவுப் பொருட்களை வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் விரும்புகிறார்கள்.
தற்போது வழங்கப்படும் பொருட்கள் தரமாகவும், எடை சரியாகவும் இருக்கிறதா? கூடுதலாக என்ன பொருட்கள் தேவைப்படுகிறது? போன்றவை குறித்து இங்கே பலர் பல்வேறு கருத்துகளை கூறுகின்றனர். அதன் விவரங்களைக் காண்போம்.
தரமாக இல்லை
திருப்பத்தூர் கசிநாயக்கன்பட்டியை சேர்ந்த இல்லத்தரசி ஏ.உமாசெல்வி ஆறுமுகம்:-
ரேஷன் கடைகளில் வழங்கும் அரிசி தரமாக இல்லை. தரமான அரிசி, பருப்பு வழங்க வேண்டும். தற்போது செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. இதை தண்ணீரில் ஊற வைத்தால் அரிசி ஊற அதிக நேரம் ஆகிறது. செறிவூட்டப்பட்ட அரிசி குறித்து தமிழக அரசு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ரேஷன் கடைகளில் கேழ்வரகு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் செலவாகும் பணத்தை வங்கி கணக்கில் செலுத்தினால் அனைவரும் தரமான அரிசி உள்ளிட்ட பொருட்களை வாங்கிக் கொள்வோம்.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த ஆயிலம் கிராமத்தை சேர்ந்த குடும்பத் தலைவி எம்.தனலட்சுமி:-
ரேஷன் கடைகளில் தற்போது அரிசி, சர்க்கரை, துவரம்பருப்பு, பாமாயில் போன்றவை மட்டுமே வழங்கப்படுகின்றன. இவை ஒரு மாதத்திற்கான தேவையைவிட குறைவாக உள்ளது. அதனை உயர்த்தி வழங்கினால் நன்றாக இருக்கும். ஏற்கனவே வழங்கி வந்த உளுந்தம் பருப்பு, கோதுமை போன்றவை நிறுத்தப்பட்டுள்ளது. இதனை மீண்டும் வழங்கவேண்டும். அதேபோல் ரவை, சேமியா, வெல்லம், பட்டாணி, கொண்டை கடலை, கடுகு, உள்ளிட்ட மளிகை பொருட்களும் தனித்தனி பாக்கெட்டுகளில் வழங்கினால் நன்றாக இருக்கும்.
கியாஸ் இணைப்பு இல்லாதவர்களுக்கு மாதந்தோறும் மண்எண்ணெய் வழங்க வேண்டும். தமிழக அரசு மக்களை தேடி மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு நல்ல திட்டங்களை கொண்டு வந்துள்ளது. அதேபோல் ரேஷன் கடைகளில் வழங்கும் உணவுப் பொருட்களும் குடும்ப அட்டைதாரர்களின் வீடுகளுக்கு சென்று வழங்கினால் நன்றாக இருக்கும்.
கோதுமை இல்லை
சேத்துப்பட்டு பழம்பேட்டை பகுதியை சேர்ந்த ராணி:- அரிசி மஞ்சளாக இருக்கிறது. அதேபோல் பச்சரிசியுடன் நொய்யரிசியும் கலந்து காணப்படுகிறது. குறிப்பிட்ட நாட்களிலும், நேரத்திலும் சென்றால் தான் ரேஷன் கடைகளில் பாமாயில், துவரம் பருப்பு கிடைக்கிறது. ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்கும் பொழுது மைதா, ரவை, உப்பு பாக்கெட், துணி துவைக்கிற சோப்பு ஏதாவது வாங்க வேண்டும் என்று கூறுகிறார்கள். அவர்கள் சொல்லும் பொருட்களை வாங்கினால் தான் கேட்கும் பொருட்களை தருகின்றனர். எங்கள் பகுதியில் வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே கடை திறக்கப்படுகிறது. தினமும் கடை திறக்க வேண்டும். கோதுமை கொடுத்து பல மாதங்கள் ஆகிறது. அரசாங்கம் அரிசி பாதி, கோதுமை பாதி வாங்கிக் கொள்ளலாம் என்கிறது. ஆனால் கோதுமை இல்லை என்று கூறி வருகிறார்கள். வீட்டிற்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் அனைத்தையும் ரேஷன் கடைகளில் விற்பனை செய்தால் ஒரே இடத்தில் வாங்கி செல்ல குடும்பத் தலைவிகளுக்கு ஏதுவாக இருக்கும்.
மண் எண்ணெய் குறைப்பு
தூசி விநாயகபுரம் தெருவை சேர்ந்த ப.பானுமதி:-
எங்கள் பகுதியில் ரேஷன் கடைகளில் பொருட்கள் அனைத்தும் தரமானதாக வழங்கப்படுகிறது. ஆனால் மண்எண்ணெய் அரை லிட்டர் மட்டுமே வழங்கப்படுகிறது. கியாஸ் சிலிண்டர் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இதனால் ஏழை, எளிய மக்கள் மீண்டும் விறகு அடுப்பிற்கும், மண்எண்ணெய் அடுப்பிற்கும் திரும்பி வருகின்றனர். எனவே அரசு ரேஷன் கடைகளில் மண்எண்ணெய் கூடுதலாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ஆவின் நெய் போன்றவையும், ரவை, சேமியா போன்றவற்றை கூடுதலாக விற்பனை செய்தால் பயனுள்ளதாக இருக்கும்.
வேலூர் சலவன்பேட்டையை சேர்ந்த குடும்பத் தலைவி சாமுண்டீஸ்வரி:-
ரேஷன்கடைகளில் வழங்கப்படும் பொருட்களுடன் சிறுதானியங்களும் வழங்கலாம். அவ்வாறு வழங்கினால் குழந்தைகளுக்கு அதை கொடுத்தால் ஆரோக்கியம் மேம்படும். வயதானவர்கள் உள்பட அனைத்து தரப்பினருக்கும் பயனுள்ளதாக அமையும். அதேவேளையில் பனங் கருப்பட்டி வழங்கலாம். நீரழிவு நோய் உள்ளவர்கள் பலர் இந்த கருப்பட்டியை பயன்படுத்துவார்கள். பனை மரத்தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் உயரும்.
தற்போது பல கடைகளில் கோதுமை வழங்குவதில்லை. கோதுமை தட்டுப்பாடு நிலவுகிறது. அதை சரிசெய்ய வேண்டும். ரேஷன் கடையில் வழங்கப்படும் அரிசி, பருப்பு, கோதுமை போன்றவை எடை குறைவாக உள்ளது. வெளி மார்க்கெட்டில் விற்கப்படுவது போன்று பருப்பு, சர்க்கரை, கோதுமைகளை பாக்கெட்டுகளாக மாற்றி கொடுக்கலாம்.
தரமானதாக வழங்கினால் போதும்
வாணியம்பாடி நகர மன்ற உறுப்பினர் ஹாஜியார் ஜகீர் அகமது:-
தமிழக அரசு சார்பில் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொருட்களில் ஒரு சில பொருட்கள் மட்டுமே தரமாக உள்ளது. பெரும்பாலும் புழுங்கல் அரிசி மிகவும் தரமற்ற முறையில் உள்ளது. இதனை மாற்றி அமைக்க வேண்டும் மேலும் போதிய அளவு மண்எண்ணெய் வினியோகிக்கப்படுவது இல்லை. எனவே கிராமப்புற மக்கள் பயனடையும் வகையில் கட்டாயம் மண்எண்ணெய் வழங்க வேண்டும். இதே போல் சர்க்கரை அளவை படிப்படியாக குறைத்து விட்டனர். எனவே சர்க்கரைக்கு பதிலாக வெல்லம் வழங்க வேண்டும்.
அதேபோல் வயது முதிர்ந்தவர்களுக்கு கைரேகை பதிவு செய்வதில் சிக்கல்கள் உள்ளது. எனவே அவர்கள் வரும்போது எவ்வித தடையுமின்றி அவர்களுக்கு பொருட்களை வழங்க வேண்டும்.
குடும்பத்தில் ஒருவர் வரும்போது அவர்களிடம் வழங்க வேண்டும் அல்லது அவரால் அங்கீகரிக்கப்பட்டவர்களுக்கு வழங்குவதற்கான உரிய நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும்.
நெமிலி, கணபதிபுரத்தை சேர்ந்த குடும்பத் தலைவி சாவித்ரி:-
தற்போது ரேஷன் கடைகளில் அரிசி, பருப்பு, கோதுமை, மைதா உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுகிறது. ஒரு சில நேரங்களில் அரிசி தரமற்றதாக இருப்பதால் அதனை சமைக்க ஏற்றதாக இல்லை. மேலும் ரேஷன் கடைகளில் அரிசி வாங்கவேண்டும் என்றால் கூடுதலாக எண்ணெய், மைதா உள்ளிட்ட பொருட்கள் வாங்க கட்டாயப்படுத்துகிறார்கள். எந்த பொருளும் கூடுதலாக எங்களுக்கு வேண்டாம். அரிசி, பருப்பு, எண்ணெய், மைதா, கோதுமை ஆகியவற்றை தரமாக வழங்கினாலே போதுமானது.
கட்டாயப் படுத்துகின்றனர்
சத்துவாச்சாரி நேதாஜிநகரை சேர்ந்த வெ.ராகினி:-
ரேஷன்கடைகளில் பொருட்கள் உரிய எடையில் வழங்கப்படுவதில்லை. ஒரு கிலோ சர்க்கரை வாங்கினால் அதில் சுமார் 200 கிராம் எடை குறைந்து காணப்படுகிறது. அனைத்து வீடுகளிலும் தற்போது கோதுமையை அதிகளவில் பயன்படுத்துகின்றனர். ரேஷன் கடைகளில் மிகக்குறைந்த அளவே வழங்கப்படுகிறது. 4 பேர் கொண்ட குடும்பத்துக்கு போதுமானதாக இல்லை. உளுந்து முன்பு வழங்கப்பட்டது. தற்போது அவை வழங்கப்படவில்லை. மீண்டும் உளுந்து வழங்க வேண்டும். ரேஷன் கடைகளில் வழங்கப்படும் துவரம் பருப்பு வேகவேண்டும் என்றால் அதிக நேரம் அடுப்பில் வைக்க வேண்டிய நிலை உள்ளது. இதுதவிர தேவையில்லாத பொருட்களையும் கட்டாயப்படுத்தி வாங்க கூறுகின்றனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
தரக்கட்டுப்பாட்டு அலுவலர்கள்
இதுகுறித்து ரேஷன் கடை ஊழியர்கள் கூறும்போது, 'ரேஷன் கடைகளுக்கு சில நேரங்களில் தரமில்லாத அரிசி வருவது வழக்கம்தான். நுகர்பொருள் வாணிப கிடங்கில் இருந்து, ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்படும் அரிசி தரமாக இருப்பதை, தரக்கட்டுப்பாட்டு அலுவலர்கள் தான் முடிவு செய்கிறார்கள். அரிசி தரமில்லை என்றால் அதற்கான பொறுப்பை அவர்களே ஏற்க வேண்டும். மாறாக ரேஷன் கடை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது. ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படும் அரிசி மூட்டைகளில் குறைந்தது 5 கிலோ எடை குறைவாகவேத்தான் வருகிறது. இதேபோல்தான் மற்ற பொருட்களிலும் எடை குறைவு உள்ளது. எனவே அனைத்து நுகர் பொருள் வாணிப கிடங்குகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி கண்காணிக்க வேண்டும்' என்றனர்.
கண்காணிப்பு குழு
உணவுத் துறை அதிகாரிகள் கூறும் போது, 'தமிழகத்தில் 2.19 கோடிக்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுகள் உள்ளன. இவற்றுக்கு கூட்டுறவு மற்றும் உணவுத் துறையின் கீழ் செயல்படும் 35 ஆயிரத்து 296 ரேஷன் கடைகள் மூலம் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படுகின்றன. நுகர்பொருள் வாணிப கழக கிடங்குகளில் இருந்து அனைத்து மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளுக்கு அரிசி, பருப்பு, சர்க்கரை, கோதுமை, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. ரேஷன் கடைகளில் தரமான பொருட்கள் வழங்குவதை உறுதி செய்யும் வகையில் ஒரு கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்தக், குழுவின் ஒருங்கிணைப்பாளராக மாவட்ட வழங்கல் அலுவலரும், உறுப்பினர்களாக நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர், கூட்டுறவுத் துறை மண்டல இணைப் பதிவாளர், குடிமைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு துணைக் கண்காணிப்பாளர் ஆகிய 4 அதிகாரிகள் அடங்கிய குழு அமைத்து கண்காணிக்கப்படுகிறது.
ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்குதல் மற்றும் குடோன்களில் இருந்து பெறுதல், சரியான விலைக்கு பொருட்கள் விற்பனை செய்யப்படுதல், சரியான நேரத்தில் அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் பொருட்கள் வழங்குவதை உறுதி செய்தல் உள்ளிட்டவைகளை இக்குழு கண்காணிக்கிறது. இதேபோல், திடீர் ஆய்வு பணிகளையும் இந்த குழு மேற்கொள்கிறது. அத்துடன் மாதம் தோறும் முதல் மற்றும் 3-வது திங்கட்கிழமைகளில் இந்த குழு கூடி, ரேஷன் கடைகளில் தரமான பொருட்கள் வழங்குவதையும், சரியான நேரத்தில் மக்களுக்கு பொருட்கள் கிடைக்கிறதா? என்பதையும் ஆய்வு செய்து விவர அறிக்கையை உணவு வழங்கல் கமிஷனருக்கு மாதந்தோறும் அனுப்பி வருகிறது. இதனால் ரேஷன் கடைகளில் தவறுகள் நடக்க வாய்ப்புகள் இல்லை. தவறு நடந்தால் கடுமையான நடவடிக்கைகளும் எடுக்கப்படுகிறது. புகார் தெரிவிக்க வேண்டிய எண்கள் கடைகளிலேயே பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு உள்ளது' என்றனர்.