லைவ் அப்டேட்ஸ்; கொந்தளிக்கும் இலங்கை; பிரதமர் ரணில் விக்ரமசிங்கே வீட்டிற்கு போராட்டக்காரர்கள் தீவைப்பு
கோத்தபய ராஜபக்சே பதவி விலக வேண்டும்: அனைத்து கட்சி தலைவர்கள் வலியுறுத்தல்
இலங்கையில் அசாதாரண சூழல் நிலவி வரும் நிலையில், அதிபர் பதவியிலிருந்து கோத்தபய ராஜபக்சே விலக வேண்டும் என்று அனைத்துக் கட்சி தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இலங்கை சபாநாயகர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அனைத்து கட்சி தலைவர்கள் இந்த கோரிக்கையை விடுத்துள்ளனர். அனைத்து கட்சி தலைவர்களின் முடிவை ஏற்க தயார் என கோத்தபய ராஜபக்சே ஏற்கனவே அறிவித்து இருக்கும் சூழலில், இன்று இத்தகைய வலியுறுத்தலை அனைத்துக் கட்சி தலைவர்கள் விடுத்துள்ளனர்.
இலங்கையில் கடந்த சில நாட்களாகவே மக்கள் போராட்டம் தீவிரமாக நடந்து வந்த நிலையில், போராட்டம் கையை மீறிச் செல்ல வாய்ப்பு உள்ளதாக அதிபர் கோத்தபய ராஜபக்சவுக்கு உளவுத் துறை ரிப்போர்ட் கொடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அதன் பின்னர் கோத்தபய ராஜபக்ச நேற்று இரவே ராணுவத் தலைமையகத்திற்குப் பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
கோத்தபய உடனடியாக ராஜினமா செய்ய வேண்டும்: சொந்த கட்சி எம்.பிக்கள் வலியுறுத்தல்
இலங்கையில் அதிபர் பதவி விலகக் கோரி மக்கள் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. போராட்டக்கார்கள் அதிபர் மாளிகையை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இதனால், இலங்கையில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. கோத்தபய ராஜபக்சே கப்பல் வழியாக தப்பிச்செல்லும் காட்சிகளும் வெளியாகியுள்ளன. கோத்தபய வெளிநாடு செல்லக்கூடும் என்று கூறப்படுகிறது. இதனிடையே, கோத்தபய ராஜபக்சே உடனடியாக பதவி விலக வேண்டும் என்று அவரது சொந்த கட்சியை சேர்ந்த எம்.பிக்கள் 16 பேர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாடாளுமன்றத்தை கூட்ட ரணில் விக்ரமசிங்கே அவசர அழைப்பு
இலங்கையில் போரட்டக்காரர்கள் அதிபர் மாளிகையை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர். இதனால் அதிபர் மாளிகையில் இருந்து அதிபர் கோத்தபய ராஜபக்சே தப்பி ஓடினார். இலங்கையில் கடுமையான நெருக்கடி சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், நாடாளுமன்ற அவசர கூட்டத்தை கூட்ட சபாநயகருக்கு இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கோரிக்கை விடுத்துள்ளார். தற்போதைய அரசியல் சூழல் குறித்து விவாதிக்க இந்தக் கூட்டம் நடைபெற உள்ளது.