விசா சேவை மீண்டும் தொடக்கம் - இந்தியாவின் முடிவுக்கு கனடா வரவேற்பு

விசா சேவையை மீண்டும் தொடங்கிய இந்தியாவின் முடிவை கனடா வரவேற்றுள்ளது.

Update: 2023-10-27 00:16 GMT

ஒட்டாவா,

கனடாவில் காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை செய்யப்பட்டதில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக அந்த நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூட்டோ பகிரங்க குற்றம் சாட்டினார். இந்தியா அதை திட்டவட்டமாக நிராகரித்தது.

இந்த விவகாரம் இரு நாட்டு உறவில் விரிசலை ஏற்படுத்தியது. இதன் எதிரொலியாக கனடா நாட்டவர்களுக்கு விசா வழங்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு நிறுத்தி வைத்தது. இந்த சூழலில் வணிகம், மருத்துவம் உள்பட குறிப்பிட்ட சில பிரிவுகளுக்கான விசா சேவையை மீண்டும் தொடங்குவதாக மத்திய அரசு நேற்று முன்தினம் அறிவித்தது.

இந்த நிலையில் விசா சேவையை மீண்டும் தொடங்கிய இந்தியாவின் முடிவை கனடா வரவேற்றுள்ளது. இது குறித்து கனடாவின் குடியேற்றத்துறை மந்திரி மார்க் மில்லர் கூறுகையில், "கனடா பிரஜைகள் பலரின் ஒரு கவலையான நேரத்துக்கு பிறகு, இந்தியாவின் இந்த நடவடிக்கை ஒரு நல்ல அறிகுறி. விசா சேவை நிறுத்தம் நடந்திருக்கக் கூடாது என்பதே எங்கள் உணர்வு. உண்மையில் இந்தியாவுடனான தூதரக நிலைமை பல சமூகங்களில் மிகுந்த அச்சத்தை உருவாக்கியுள்ளது" என்றார்.


Tags:    

மேலும் செய்திகள்