ரஞ்சி கோப்பை கிரிக்கெட்; தமிழ்நாடுக்கு எதிரான ஆட்டம்....2ம் நாள் ஆட்ட நேர முடிவில் குஜராத் 24 ரன்கள் முன்னிலை..!

தமிழ்நாடு அணி தனது முதல் இன்னிங்சில் 67.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 250 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.

Update: 2024-01-06 14:56 GMT

Image Courtesy: @BCCIdomestic

காந்திநகர்,

89-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் பல்வேறு நகரங்களில் இன்று தொடங்கியது. தொடக்க நாளான நேற்று 16 லீக் ஆட்டங்கள் ஆரம்பமாகின.

இதில் குஜராத் மாநிலம் வல்சத்தில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் சாய்கிஷோர் தலைமையிலான தமிழக அணி, சின்டன் கஜா தலைமையிலான குஜராத் அணியுடன் விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தமிழக அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி தமிழக வீரர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 72.3 ஓவர்களில் 236 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அத்துடன் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. குஜராத் அணியில் அதிகபட்சமாக உமங் குமார் 76 ரன்கள் அடித்தார். தமிழக அணி தரப்பில் அதிகபட்சமாக எம் முகமது 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

இதையடுத்து 2-வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. இதையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய தமிழ்நாடு அணி 67.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 250 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் தமிழக அணி 14 ரன்கள் முன்னிலை பெற்றது.

இதையடுத்து 14 ரன்கள் பின்னிலையுடன் தனது 2வது இன்னிங்சை தொடங்கிய குஜராத் அணி 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 38 ரன்கள் எடுத்து 24 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இந்திய அணி தரப்பில் சந்தீப் வாரியர் 3 விக்கெட்டுகளை எடுத்தார். 3ம் நாள்ஆட்டம் நாளை நடைபெறுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்