ரஞ்சி டிராபி கிரிக்கெட்; தமிழகத்திற்கு எதிரான ஆட்டம் - முதல் நாள் முடிவில் கர்நாடகா 288/5

தமிழக அணி தரப்பில் சாய் கிஷோர் 3 விக்கெட்டும், அஜித் ராம் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

Update: 2024-02-09 12:24 GMT

Image Courtesy: @TNCACricket

சென்னை,

89-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதி வருகின்றன.

இந்த தொடரில் தமிழக அணி 'சி' பிரிவில் அங்கம் வகிக்கிறது. இந்நிலையில் தமிழகம் - கர்நாடகா அணிகளுக்கு அணிகளுக்கு இடையிலான லீக் ஆட்டம் இன்று சென்னையில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற கர்நாடகா அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

இதையடுத்து கர்நாடகா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மயங்க் அகர்வால் மற்றும் ரவிக்குமார் சமர்த் ஆகியோர் களம் இறங்கினர். இதில் மயங்க் அகர்வால் 20 ரன், சமர்த் 57 ரன் எடுத்து அவுட் ஆகினர். இதையடுத்து களம் இறங்கிய தேவ்தத் படிக்கல் ஒருபுறம் நிலைத்து நின்று ஆட மறுமுனையில் கள இறங்கிய நிகின் ஜோஸ் 13 ரன், மனிஷ் பாண்டே 1 ரன், கிஷன் பெதாரே 3 ரன் எடுத்து அடுத்தடுத்து அவுட் ஆகினர்.

இதையடுத்து ஹார்டிக் ராஜ் களம் இறங்கினார். இதற்கிடையில் நிலைத்து நின்று ஆடிய படிக்கல் சதம் அடித்து அசத்தினார். இறுதியில் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் கர்நாடகா அணி 90 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 288 ரன்கள் எடுத்துள்ளது. தமிழக அணி தரப்பில் சாய் கிஷோர் 3 விக்கெட்டும், அஜித் ராம் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். 2ம் நாள் ஆட்டம் நாளை நடைபெறுகிறது.


Tags:    

மேலும் செய்திகள்