ரஞ்சி டிராபி கிரிக்கெட்; டிராவில் முடிந்த தமிழகம் - கர்நாடகா ஆட்டம்

தமிழக அணி தனது அடுத்த லீக் ஆட்டத்தில் பஞ்சாபை வரும் 16ம் தேதி சேலத்தில் எதிர்கொள்கிறது.

Update: 2024-02-12 12:38 GMT

Image Courtesy: @TNCACricket

சென்னை,

89-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதி வருகின்றன.

இந்த தொடரில் தமிழக அணி 'சி' பிரிவில் அங்கம் வகிக்கிறது. இந்நிலையில் தமிழகம் - கர்நாடகா அணிகளுக்கு அணிகளுக்கு இடையிலான லீக் ஆட்டம் சென்னையில் நடைபெற்றது. இந்த ஆட்டத்துக்கான டாசில் வென்ற கர்நாடகா அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய கர்நாடகா அணி தனது முதல் இன்னிங்சில் 119.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 366 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. கர்நாடகா தரப்பில் படிக்கல் 151 ரன் அடித்தார். தமிழக அணி தரப்பில் அஜித் ராம் 4 விக்கெட்டும், சாய் கிஷோர் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய தமிழக அணி 69.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 151 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. கர்நாடகா அணி தரப்பில் அதிகபட்சமாக விஜய்குமார் வைஷாக் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். தமிழகம் தரப்பில் அதிகபட்சமாக இந்திரஜித் 48 ரன்கள் எடுத்தார்.

இதையடுத்து 215 ரன் முன்னிலையுடன் தனது 2வது இன்னிங்சை தொடங்கிய கர்நாடகா தமிழகத்தின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் வெறும் 139 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. தமிழக அணி தரப்பில் அஜித் ராம் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதையடுத்து 355 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தனது 2வது இன்னிங்சை தொடங்கிய தமிழக அணி நேற்றைய 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 36 ரன்கள் எடுத்திருந்தது. தமிழகம் தரப்பில் விமல் குமார் 16 ரன்னுடனும், பிரதோஷ் பால் 10 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இதையடுத்து கடைசி நாளான 4ம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது.

இதில் தொடர்ந்து பேட்டிங் ஆடிய தமிழக அணியில் விமல் குமார் 31 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து பிரதோஷ் பாலுடன் இந்திரஜித் ஜோடி சேர்ந்தார். இதில் பிரதோஷ் பால் அரைசதம் அடித்த நிலையில் 74 ரன்னில் அவுட் ஆனார்.

இதையடுத்து களம் இறங்கிய பூபதி குமார் 19 ரன், முகமது 15 ரன் எடுத்து ஆட்டம் இழந்தனர். இதையடுத்து இந்திரஜித்துடன் விஜய் சங்கர் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக ஆடி அணியை வெற்றிக்கு அழைத்து சென்றனர். இதில் விஜய் சங்கர் 60 ரன்னிலும், சதம் அடிப்பார் என எதிரபார்க்கப்பட்ட இந்திரஜித் 98 ரன்னிலும் அவுட் ஆகினர்.

இறுதியில் வெற்றிக்கு மிக அருகில் வந்த தமிழக அணி ஆட்ட நேர முடிவில் 105 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 338 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து இந்த ஆட்டம் டிராவில் முடித்து கொள்ளப்பட்டது. தமிழக அணி தனது அடுத்த லீக் ஆட்டத்தில் பஞ்சாபை வரும் 16ம் தேதி சேலத்தில் எதிர்கொள்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்